இந்தியாவின் பாதுகாப்பில் திருப்புமுனை: வல்லுனர்கள் கருத்து


இந்தியாவின் பாதுகாப்பில் திருப்புமுனை: வல்லுனர்கள் கருத்து
x
தினத்தந்தி 29 July 2020 11:00 PM GMT (Updated: 29 July 2020 8:23 PM GMT)

இந்தியாவின் பாதுகாப்பில் மாபெரும் திருப்புமுனையாக ரபேல் போர் விமானங்கள் அமைந்திருப்பதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி, 

இந்திய பாதுகாப்புப்படையின் வலிமையை பெருக்கும் வகையில் 36 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து வாங்குவதற்கான நடவடிக்கையில் மத்தியில் அமைந்துள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்தது. அதில் முதல் கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் நேற்று இந்தியா வந்து அடைந்தன.

அம்பாலா விமானப்படை தளத்தில் வந்திறங்கிய அந்த விமானங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்த மாதம் முறைப்படி இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானங்கள் சேர்க்கப்படுகின்றன.

இந்த ரபேல் போர் விமானங்கள், ஒப்பிட முடியாத திறன்களை கொண்டவை என்பது பாதுகாப்பு துறை வல்லுனர்களின் பொதுவான கருத்தாக அமைந்துள்ளது. எல்லையில் இந்தியாவுடன் வாலாட்டி வருகிற சீனா, பாகிஸ்தான் போன்றவற்றை நெஞ்சுரத்துடன் எதிர்கொள்ளும் வலிமையை இந்த போர் விமானங்கள் தரும்.

சீனாவுடன் எல்லையில் பதற்றம் நிலவிவருகிற இந்த தருணத்தில் 4.5-ம் தலைமுறை ரபேல் விமானங்கள் வந்திறங்கி இருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த விமானங்கள், இந்தியாவின் பாதுகாப்பில் மாபெரும் திருப்புமுனையாக அமையும் என்று வல்லுனர்கள் பெருமிதப்படுகிறார்கள்.

36 ரபேல் விமானங்களும் இந்திய விமானப்படையில் சேர்ந்து விட்டால், அவற்றின் உயர் செயல்திறன், சக்திவாய்ந்த மின்னணு போர் அமைப்புகளுடன் அருகில் உள்ள எந்தவொரு நாட்டின் போர் விமானமும் பொருந்தாது என்று வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ரபேல் போர் விமானங்கள், அமெரிக்காவின் எப்-35, எப்-22 விமானங்களுடன்தான் பெரும்பாலும் ஒப்பிடப்படுகின்றன. ரபேல் போர் விமானத்தின் ஏர் சுபீரியாரிட்டி என்று அழைக்கப்படுகிற வான் மேன்மை மிக சிறப்பானது. இது வானில் இருந்து வான் இலக்குகளையும், தரை இலக்குகளையும் தாக்குவதுடன், எதிரிநாட்டு வான்பகுதியையும் கட்டுப்பாட்டில் எடுக்கும் திறனை குறிக்கிறது.

ஆப்கானிஸ்தான், லிபியா, மாலி, ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் கடந்த காலத்தில் இந்த விமானங்கள் போர் நடவடிக்கைகளில் தங்களது ஒப்பிட முடியாத திறன்களை வெளிப்படுத்தி உள்ளன.

இந்த விமானங்களை வாங்கி இருப்பதின் மூலம் பிரான்ஸ், எகிப்து, கத்தார் ஆகியவற்றின் வரிசையில் 4-வது நாடாக இந்தியா சேர்கிறது.

அமெரிக்காவின் எப்-35 போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் ரபேல் போர் விமானங்கள் அதிக சுறுசுறுப்பானது, அதிவேகத்தில் பறக்கக்கூடியது. நீண்ட தூரத்துக்கு ஆயுதங்களை எடுத்துச்செல்லும் வலிமை வாய்ந்தவை.

பாதுகாப்பு துறை வல்லுனரான டி லட்சுமன் பெஹைரா ரபேல் போர் விமானங்கள் குறித்து சொல்லும்போது, “இந்த விமானங்கள், உலக சந்தையில் கிடைக்கும் மிகச்சிறந்த போர் விமானங்களில் ஒன்று. தற்போது சீனாவிடம் உள்ள போர் விமானத்தை விட இது மேம்பட்டது, ஆபத்தானது. இது இந்திய பாதுகாப்பு படைகளின் ஆயத்த நிலையை மேலும் உயர்த்தும். இந்த விமானங்கள் சரியான நேரத்தில் இந்தியா வந்து சேர்ந்துள்ளன” என குறிப்பிட்டார்.

சீனாவின் போர் விமானமான ஜே-20 பற்றி கேட்டபோது, இதை ரபேல் விமானத்துடன் ஒப்பிட முடியாது. சீன விமானத்தை விட ரபேல் விமானம் அதிக சக்தி வாய்ந்தது என பதில் அளித்தார்.

ரபேல் விமானத்தில் மிக மிக துல்லியமான ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிரியின் வான்பகுதியை எளிதாக கண்காணித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

அணுகுண்டுகளையும் எடுத்துச்சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் ஆற்றல் ரபேல் போர் விமானங்களுக்கு உண்டு.

விமானியின் ஆக்சிஜன் தேவைக்கு, விமானத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்கிற வசதி இருக்கிறது. இந்த வசதியை ஏர் லிகுயிட் நிறுவனம் உருவாக்கி தந்துள்ளது. இதனால் விமானி எப்போதும் நம்பிக்கையுடன் செயல்பட முடியும். ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்ல வேண்டியதில்லை.

இந்த விமானத்தின் வடிவமைப்பு, எதிரியின் ரேடார் கண்களில் இருந்து எளிதாக தப்பும் விதத்தில் உள்ளது.

மேலும், முப்பரிமாண நிகழ்நேர வரைபடத்தை பெறும் வசதி உள்ளதால் ரபேல் போர் விமானங்கள் எதிரியின் இலக்குகளை குறி வைத்து தாக்கவும் முடியும். எல்லா பருவநிலையிலும் துல்லியமான வரைபடத்தை பெறவும் இயலும்.

ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் ஏறத்தாழ 3,700 கி.மீ. தொலைவுக்கு பயணிக்கும். எனவே எதிரிகளின் பகுதிகளுக்கு சென்று திரும்பும் சக்தி கொண்டது.

15.30 மீட்டர் நீளமுள்ள இந்த விமானங்களை அதிகபட்சம் மணிக்கு 2,130 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். இயல்பான வேகம் மணிக்கு 1,912 கி.மீ.

ஒவ்வொரு விமானத்திலும் ஆயுதங்கள் வைக்க 14 சேமிப்பு கிடங்குகள் உள்ளன.

இந்த விமானத்தின் நீளம் 15.30 மீட்டர். உயரம் 5.30 மீட்டர். ஒட்டுமொத்த வெற்று எடை 10 டன். வெளிசுமைகள் 9.5 டன்கள்.


Next Story