புகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்


புகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்
x
தினத்தந்தி 29 July 2020 11:24 PM GMT (Updated: 29 July 2020 11:24 PM GMT)

புகையிலையை பயன்படுத்துவோர், புகை பிடிப்போருக்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன.

இந்த நிலையில், புகையிலை பொருட்களை உபயோகிப்பவர்கள், குறிப்பாக சிகரெட் புகைப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிர பாதிப்புக்கு ஆளாகிற வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் திட்டவட்டமாக கூறி உள்ளது.

இதையொட்டி அந்த அமைச்சகம் ‘இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் புகையிலை உபயோகம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புகை பிடிப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயின் கடுமையான தாக்குதலுக்கு அல்லது இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று வல்லுனர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். ஏனெனில் இது முதன்மையாக நுரையீரலை தாக்கி, புகையிலை தயாரிப்புகளை பயன்படுத்துவதை எச்சரிக்கிறது. புகை பிடிப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்றின் அதிக பாதிப்புக்கு ஆளாகக்கூடும். ஏனென்றால் புகை பிடிப்பதால் விரல்கள், உதடுகளுடன் தொடர்பு கொள்கின்றன. இது கையில் இருந்து வைரஸ், வாய்க்கு பரவும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை வேகப்படுத்துவதின்மூலம் புகையிலை உபயோகம் குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் வைரஸ் தொற்று முதன்மையாக எச்சில் துளிகள் அல்லது மூக்கில் இருந்து வெளியேற்றப்படுவதின்மூலம் எளிதாக பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபர் இருமுகிறபோது அல்லது தும்முகிறபோது கைனி, குட்கா, பான், சர்தா போன்ற புகையிலை பொருட்களை மெல்லுவது துப்புவதற்கான தூண்டுதலை அதிகரிக்கிறது.

பொது இடங்களில் துப்புவது என்பது சுகாதார அபாயங்களை அதிகரிக்கிறது.

இது கொரோனா வைரஸ் தொற்று நோய், காசநோய், பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்களை பரப்புகிறது.

எந்தவொரு புகையிலை பொருட்கள் உபயோகத்திற்கும் எதிராக மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுக்கிறது. புகையிலைப்பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதை விட்டு விட்டால், 12 மணி நேரத்துக்குள் ரத்த ஓட்டத்தில் கார்பன்மோனாக்சைடு சாதாரண நிலைக்கு குறைகிறது. 2 முதல் 12 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் மேம்படுகிறது. நுரையீரல் செயல்பாடுகள் அதிகரிக்கிறது. 1 முதல் 9 மாதங்களில் இருமல், சுவாச பிரச்சினை குறைகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story