கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளை திறக்க மக்களிடம் வரவேற்பு இல்லை: கருத்துக்கணிப்பு முடிவில் அம்பலம்


கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளை திறக்க மக்களிடம் வரவேற்பு இல்லை: கருத்துக்கணிப்பு முடிவில் அம்பலம்
x
தினத்தந்தி 29 July 2020 11:33 PM GMT (Updated: 29 July 2020 11:33 PM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளை திறக்க பெரும்பான்மையான மக்களிடம் வரவேற்பு இல்லை என்பது ஒரு கருத்துக்கணிப்பில் அம்பலமாகி உள்ளது.

கொல்கத்தா, 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிற நிலையில், தொடர் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக வணிக வளாகங்கள், பன்னடுக்கு திரையரங்குகள், பன்னாட்டு விமான சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்டு 1-ந் தேதி ‘அன்லாக்-3’ என்ற பெயரில் அரசு என்னென்ன ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தப்போகிறது என்ற அறிவிப்புக்காக அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பாக ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற சமூக ஊடக தளம், நாடு முழுவதும் 255 மாவட்டங்களில், 34 ஆயிரம் பேரிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வருமாறு:-

* கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், ஆபத்து உள்ளதால் அடுத்த 60 நாட்களில் பன்னடுக்கு திரையரங்குகளுக்கு செல்ல விருப்பம் இல்லை என்று கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 72 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 6 சதவீதம் பேர் மட்டுமே இவற்றை திறக்க ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

* ஆகஸ்டு 1-ந் தேதி முதல் உள்ளூர் ரெயில்சேவை, மெட்ரோ ரெயில் சேவைகளை தொடங்க 63 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 29 சதவீதத்தினர் மட்டுமே ஆதரவு அளிக்கின்றனர்.

* பன்னாட்டு விமான சேவையை ஆகஸ்டு மாதம் தொடங்குவதற்கு 62 சதவீதத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 31 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவான கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்து கணிப்பு முடிவுகள், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.


Next Story