மராட்டிய மாநிலத்தில் மேலும் 121 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டிய மாநிலத்தில் மேலும் 121 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 31 July 2020 1:21 PM GMT (Updated: 31 July 2020 1:42 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் மேலும் 121 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகியுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்த மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கும் அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று புதிதாக மேலும் 121 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மராட்டிய மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 9,217ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 7,176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 1,939 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 காவலர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பலியான காவலர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

Next Story