இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறிய சாதனை அளவாக 24 மணி நேரத்தில் 6.42 லட்சம் மாதிரிகள் பரிசோதனை


இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறிய சாதனை அளவாக 24 மணி நேரத்தில் 6.42 லட்சம் மாதிரிகள் பரிசோதனை
x
தினத்தந்தி 31 July 2020 11:15 PM GMT (Updated: 31 July 2020 8:53 PM GMT)

இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறிய சாதனை அளவாக 24 மணி நேரத்தில் 6.42 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய மந்திரிகள் குழுவின் 19-வது கூட்டம் நேற்று நடந்தது. காணொலி காட்சி வழியாக நடந்த கூட்டத்துக்கு மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் தலைமை தாங்கினார்.

மத்திய மந்திரிகள் எஸ்.ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி, மன்சுக்லால் மாண்டவியா, அஷ்விணிகுமார், நித்யானந்த் ராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் இயக்குனர் டாக்டர் சுர்ஜித் சிங், அதிகபட்ச பாதிப்புக்கு ஆளாகியுள்ள 10 நாடுகளுடன் தினசரி பாதிப்புகள், இறப்புகள், வளர்ச்சிவிகிதம் குறித்த உலகளாவிய ஒப்பீட்டை முன்வைத்தார்.

இந்த கூட்டத்தில், இந்தியாவில் குணம் அடைவோரின் விகிதாசாரம் 64.54 சதவீதமாக உயர்ந்திருக்கிறது; டெல்லியில் இது அதிகபட்சமாக 89.08 சதவீதமாகவும், அரியானாவில் 79.82 சதவீதமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. குணம் அடைவோர் விகிதாசாரம் நாட்டிலேயே குறைந்த அளவாக கர்நாடகத்தில் 39.36 சதவீதமாக இருப்பதாக கூறப்பட்டது.

நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் இயக்குனர் டாக்டர் சுர்ஜித் சிங், நாட்டில் கொரோனா பாதிப்பு மோசமாக உள்ள மராட்டியம், தமிழகம், டெல்லி, ஆந்திரா, கர்நாடகம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், குஜராத், தெலுங்கானா, பீகார், ராஜஸ்தான், அசாம் ஆகிய 12 மாநிலங்களில் வளர்ச்சி வீதம், பரிசோதனைகளின் எண்ணிக்கை, பாதிப்பு உறுதி விகிதம் பற்றியும் விளக்கினார்.

உள்நாட்டில் முக கவசம், வென்டிலேட்டர்ள், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் போன்றவற்றை உற்பத்தி செய்கிற திறனை அதிகரிப்பது பற்றியும் மந்திரிகள் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

2 கோடியே 68 லட்சம் என்-95 முக கவசங்கள், 1 கோடியே 20 லட்சம் சுய பாதுகாப்பு உடைகள்-கருவிகள், 10 கோடியே 83 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வினியோகிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் பேசுகையில் வெளியிட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:-

* தற்போது நாட்டில் சிகிச்சை பெற்று வருகிற கொரோனா நோயாளிகளில் 0.28 சதவீதத்தினர் மட்டுமே வென்டிலேட்டரின் கீழும், 1.61 சதவீதத்தினர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவிலும் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த 2.32 சதவீதத்தினர் ஆக்சிஜன் ஆதரவுடன் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவில் குணம் அடைந்தோர் அளவு 10 லட்சம் என்ற மைல் கல்லை கடந்துள்ளது. குணம் அடைந்தோர் விகிதாசாரம் 64.54 சதவீதம். தற்போது 33.27 சதவீதத்தினர் மட்டுமே மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் மூன்றில் 1 பங்கு மட்டுமே.

* இறப்புவீதம் தொடர்ந்து குறைந்து, 2.18 சதவீதம் ஆகி இருக்கிறது. உலகின் குறைவான இறப்புவீதத்தில் இதுவும் ஒன்று.

* நாட்டில் அரசு துறையில் 911, தனியார் துறையில் 420 என மொத்தம் 1,331 பரிசோதனைக்கூடங்கள் உள்ளன.

* கடந்த 24 மணி நேரத்தில் சாதனை அளவாக 6 லட்சத்து 42 ஆயிரத்து 588 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ள மொத்த மாதிரிகள் எண்ணிக்கை 1.88 கோடி ஆகும்.

மேற்கண்ட தகவல்களை சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் வெளியிட்டார்.

Next Story