குஜராத் போலீசின் முதல் ‘லெஸ்பியன்’ காதல் ஜோடி; பெற்றோர் எதிர்ப்பால் கோர்ட்டை நாடி பாதுகாப்பு பெற்றனர்


குஜராத் போலீசின் முதல் ‘லெஸ்பியன்’ காதல் ஜோடி; பெற்றோர் எதிர்ப்பால் கோர்ட்டை நாடி பாதுகாப்பு பெற்றனர்
x
தினத்தந்தி 1 Aug 2020 11:23 PM GMT (Updated: 1 Aug 2020 11:23 PM GMT)

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், குஜராத் போலீசில் ஒரு ‘லெஸ்பியன்’ காதல் ஜோடி பரபரக்க வைத்து விட்டது.

மஹிசாகர்,

பிரீத்தி, ஆவ்னி என்பது அவர்களது பெயர்கள். (பெயர்கள் மாற்றி தரப்பட்டுள்ளன). “உனக்கும் 24 எனக்கும் 24” என்று சொல்லும் வகையில் சம வயதினர். ஒரே பாலினத்தவர் என்றாலும் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லை என்பதே நிலை என உணர்ந்தனர். அதனால் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். நீண்ட காலமாகவே இது நடந்து வந்திருக்கிறது.

இது அவர்களுடைய நட்பு வட்டாரத்துக்கும், சக போலீஸ் வட்டாரத்துக்கும் தெரியுமாம்.

ஆனால் அவர்களது காதலுக்கு சிக்கல் வந்தது, பிரீத்தியின் பெற்றோர் வடிவத்தில். அவர்கள் பிரீத்தியின் காதலுக்கு போர்க்கொடி தூக்கினர். வீடு தேடிச்சென்று மகளை சந்தித்தனர். “ம்கூம்... இதெல்லாம் சரியில்லைம்மா.. வேலையை விட்டுடு... எங்களோடு வந்துடு” என்று சொல்லிப் பார்த்தனர். பிரீத்தி சம்மதிக்கவில்லை. ஆவ்னியுடனான காதலில் உறுதியாக இருந்தார்.

இதுபற்றி பிரீத்தி சொல்லும்போது, “ எங்கள் காதல் உறவை அப்பா, அம்மாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. வாழ்க்கையில் நான் விரும்புவது என்ன, என் வாழ்க்கையை நான் எப்படி வாழ விரும்புகிறேன் என்பதில் அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை” என்கிறார். பெற்றோரின் தொல்லை தொடரவே பிரீத்தி, ஆவ்னி ஜோடி மஹிசாகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கேட்டு கடிதம் எழுதினர். அதற்கு சரியான பதில் இல்லை. உடனே அவர்கள் ஐகோர்ட்டை நாடினர்.

இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு உஷா ராடா கருத்து தெரிவிக்கையில், “அவர்கள் இருவரும் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கவலை, அவர்கள் எப்படி தங்கள் போலீஸ் வேலையை செய்யப்போகிறார்கள் என்பதுதான்” என்றார்.

ஆனால் இந்த ‘லெஸ்பியன்’ காதல் ஜோடியின் வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஜே.தேசாய், இந்த விவகாரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலையிட்டு அவர்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இது காதல் ஜோடியை நிம்மதிப்பெருமூச்சு விட வைத்துள்ளது.

இதுபற்றி அந்த காதல் ஜோடியின் வக்கீல் ஜாகீர் ரத்தோடு கூறும்போது, “இவர்கள் கோர்ட்டுக்கு போவார்கள் என்று அவர்கள் (பிரீத்தி பெற்றோர்) எதிர்பார்க்கவில்லை. இந்த பெண்கள் துணிச்சலானவர்கள், படித்தவர்கள். அரசு பணியில் இருக்கிறார்கள். தாங்கள் விரும்பும் விதத்தில் வாழ்வதற்கு தங்களுக்கு உள்ள உரிமைக்காக போராடுவதில் இருந்து அவர்கள் விலகிச்செல்லவில்லை” என குறிப்பிட்டார். அவர் கூறிய கூடுதல் தகவல், இந்த காதல் ஜோடிதான் குஜராத் போலீசில் பகிரங்கமாக அறிவித்துள்ள முதல் லெஸ்பியன் ஜோடி என்பதாகும்.

Next Story