முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே அமைக்கப்படும் ராமர் கோவில்


முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே அமைக்கப்படும் ராமர் கோவில்
x
தினத்தந்தி 4 Aug 2020 5:24 AM GMT (Updated: 4 Aug 2020 5:24 AM GMT)

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில், முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி,

அயோத்தியில் 5ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்க உள்ளது. அதில், பங்கேற்கும் பிரதமர் மோடி, கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். இதனிடையே, கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால், 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 90 வயதை கடந்த பிரமுகர்கள், அயோத்தியை அடைவது சாத்தியம் இல்லை என கூறியுள்ள ராம ஜென்ம பூமி அறக்கட்டளை, சதுர்மாக்கள், முனிவர்கள், சங்கராச்சாரியார், துறவிகள் ராமர் கோயில் கட்டுமானத்தில் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆலயங்களின் புனித மண், 100 நதிகளின் புனித நீரும் பூமி பூஜைக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. அயோத்தி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் கோவில் கட்டுமானம் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது: ராமருக்கான கோவிலில், இரும்பு கம்பிகள், மரம், தாமிரம், வெள்ளை சிமென்ட் ஆகியவை பயன்படுத்தப்படாது. பல நுாற்றாண்டுகள் நிலைத்து இருக்கும் என்பதால், முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே அமைக்கப்படும்.

இதற்கு தேவையான கற்கள் ஏற்கனவே அயோத்தியில் உள்ளன. கூடுதலாக தேவைப்படும் கற்கள், ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட உள்ளன. பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகியவை, கோவிலுக்கான அஸ்திவாரத்தில் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ராமர் கோவில்  360 தூண்களுடன் விசாலமான 5 குவி மாடங்களுடன், 161 அடி உயர கோபுர கலசத்துடன் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான கற்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஷி மலையில் இருந்து கொண்டு வரப்பட உள்ள நிலையில், மூன்றரை ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக சந்திரகாந்த் பாய் சோம்புரா  என்பவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில்  ஸ்ரீராம் என எழுதப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட செங்கல்கள் இந்த கோவிலின் அடித்தளத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது சிறப்பு அம்சமாகும்.

கோவில் படிக்கட்டுகள் 16 அடி அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. ரங்க மற்றும் நிருத்திய மண்டபங்கள் கடந்த காலங்களில், கோவிலில் பணியாற்றும்  தேவதாசி பெண்கள் நடனமாட பயன்பட்ட நிலையில், தற்போது அவை, மூன்று பக்கமும் இருந்து பகவான் ராமரை தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.


Next Story