சுஷாந்த் சிங் மரண வழக்கு; சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரை


சுஷாந்த் சிங் மரண வழக்கு; சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரை
x
தினத்தந்தி 4 Aug 2020 6:28 AM GMT (Updated: 4 Aug 2020 6:28 AM GMT)

சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது.

பாட்னா,

எம்.எஸ். தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் (வயது34). இவர் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழில்போட்டி காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தால் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின்பேரில் தற்கொலைக்கு தூண்டுதல், திருட்டு, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகை ரியா சக்கரபோர்த்தி, சுஷாந்த் சிங் காதலி ஆவார்.

சுஷாந்த் சிங் மரண வழக்கை விசாரிக்க  மும்பை வந்துள்ள பாட்னா போலீசாருக்கு மும்பை போலீஸ் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் பீகார் அரசியல் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது.


Next Story