கல்வியில் விருப்பமில்லா இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கான திறனை எப்படி வளர்த்து கொள்வார்கள்? பிரதமர் மோடி கேள்வி


கல்வியில் விருப்பமில்லா இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கான திறனை எப்படி வளர்த்து கொள்வார்கள்? பிரதமர் மோடி கேள்வி
x
தினத்தந்தி 7 Aug 2020 7:42 AM GMT (Updated: 7 Aug 2020 7:42 AM GMT)

நம்முடைய கல்வியில் விருப்பமோ, கல்வி கற்பதற்கான நோக்கமோ இல்லையெனில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான திறனை இளைஞர்கள் எப்படி வளர்த்து கொள்வார்கள் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

புதிய கல்வி கொள்கை குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.  எனினும், மும்மொழி கொள்கை உள்ளிட்ட விசயங்களுக்காக தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில், புதிய கல்வி கொள்கை பற்றி விரிவான விளக்கம் அரசு சார்பில் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  இந்த சூழலில், மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானிய குழு இணைந்து தேசிய கல்வி கொள்கையின் கீழ் உயர்கல்வியில் உருமாற்ற சீர்திருத்தங்கள் என்ற தலைப்பிலான நிகழ்ச்சியை நடத்துகிறது.

இதில், பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இணை அமைச்சர் சஞ்சய் தோட்ரே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி பேசும்பொழுது, தேசிய கல்வி கொள்கை வெளியிடப்பட்ட பின்னர், நாட்டின் எந்த பிரிவினரும் இந்த கொள்கை ஒரு சார்புடையது என கூறவில்லை.  இது மகிழ்ச்சியளிக்க கூடிய விசயம்.

ஒவ்வொரு நாடும், தேச மதிப்புகளுடன் அதன் கல்வி திட்டத்தினை இணைத்து முன்னோக்கி செல்கிறது.  தேச இலக்குகளுக்கு ஏற்ப அதனை சீர்திருத்தி கொள்கிறது.

நடப்பு மற்றும் வருங்கால தலைமுறையினருக்கான ‘வருங்காலம் தயார்’ என்பதனை பாதுகாத்து கொள்வதற்கான இலக்குகளை கல்வி திட்டம் ஆனது கொண்டுள்ளது.

நம்முடைய கல்வி கொள்கையில் கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.  இதன் விளைவு, நமது சமூக மக்களிடம் கற்று கொள்ளும் ஆர்வம் மற்றும் கற்பனை திறன் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு பதிலாக, நடுநிலையற்ற மனப்போக்கை ஊக்கமடைய செய்து விட்டது.

நம்முடைய கல்வியில் விருப்பம் இல்லையெனில், கல்வி கற்பதற்கான நோக்கம் இல்லையென்றால், எப்படி இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கான திறனை வளர்த்து கொள்வார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு புதிய உலக தரநிலை உருவாகி வருகிறது.  அதற்கேற்ப கல்வி திட்டத்தினை இந்தியா மாற்றியமைப்பது அத்தியாவசியம் ஆகியுள்ளது.  அந்த நோக்கில், 10 மற்றும் 12ம் வகுப்பு என பள்ளி கூடங்களில் இருக்கும் பாடத்திட்ட கட்டமைப்பு முறையில் இருந்து முன்னேறி 5+3+3+4 பாடத்திட்ட கட்டமைப்பு முறை உருவாக்கப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Next Story