மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி? உறவினர்கள் பரபரப்பு தகவல்
மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி? என்பது குறித்து உறவினர்கள் பரபரப்பு தகவல்களை தெரிவித்தனர்.
நிலச்சரிவில் சிக்கிய கயத்தாறு பாரதிநகரைச் சேர்ந்த தொழிலாளர்களின் உறவினர்கள் கூறியதாவது:-
மண்ணோடு மூடப்பட்டகுடியிருப்புகள்
தேயிலை பயிரிடப்பட்ட மலைப்பகுதியின் அடிவாரத்திலேயே ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையால் அமைக்கப்பட்ட வீடுகளில் குடும்பத்துடன் தங்கி கயத்தாறு தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அங்கு மலைப்பகுதியில் 120 குடியிருப்புகளில் அவர்கள் வசித்தனர்.
கனமழை காரணமாக மலைப்பகுதியில் இருந்து சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அங்கிருந்து சிலர் வெளியேறி மேடான பகுதிக்கு வந்தனர். தொடர்ந்து அங்கு தங்கியிருந்த மற்ற தொழிலாளர்களை வெளியேறுமாறு கூச்சலிட்டனர். எனினும் அங்கு சில வினாடிகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகளை அமுக்கியது.
மீட்பு பணி
இதற்கிடையே டீத்தூள் நிறுவன அதிகாரிகள் வசிக்கும் ராஜமலை பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள பாலம், கனமழை காரணமாக உடைந்தது.
நேற்று முன்தினம் காலையில் மாற்றுப்பாதை வழியாக சென்று, வனத்துறையினர், உள்ளூர் நிர்வாகத்தினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு செல்வதற்கு தற்காலிக பாலம் அமைத்து, மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. தீயணைப்பு துறையினரும், பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பருவமழை தீவிரம் அடையும்போது, முன்னெச்சரிக்கையாக மலைப்பகுதியில் வசித்தவர்களை மாற்று இடத்தில் தங்க வைத்து இருந்தால், இந்த துயர சம்பவம் நிகழ்ந்து இருக்காது.
இவ்வாறு அவர்கள் வேதனை யுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story