முப்படைகளுக்கும் ரூ.4 லட்சம் கோடி அளவிலான தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு


முப்படைகளுக்கும் ரூ.4 லட்சம் கோடி அளவிலான தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Aug 2020 5:59 AM GMT (Updated: 9 Aug 2020 5:59 AM GMT)

முப்படைகளுக்கும் ரூ.4 லட்சம் கோடி அளவிலான தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் காலை 10 மணிக்கு அடுத்தடுத்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அந்த டுவிட்டர் பதிவுகளில், இந்திய அரசு பாதுகாப்புத்துறையில் சுயசார்பு அடைவதற்கான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் சுயசார்பு திட்டத்தின் கீழ் பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, 101 வகையான பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். முப்படைகளுக்கும் ரூ.4 லட்சம் கோடி அளவிலான தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு மூலதன கொள்முதல் திட்டத்திற்காக  சுமார் 52,000 கோடி ரூபாயில் ஒரு தனி பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அவர், துப்பாக்கிகள், சரக்கு போக்குவரத்துக்கான விமானங்கள், ரேடார்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Next Story