விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு - கேரள அரசு வழங்கியது


விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு - கேரள அரசு வழங்கியது
x
தினத்தந்தி 11 Aug 2020 6:18 PM GMT (Updated: 11 Aug 2020 6:18 PM GMT)

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

திருவனந்தபுரம், 

விஞ்ஞானி நம்பி நாராயணன், அந்நிய நாட்டிடம் பணம் பெற்றுக்கொண்டு ராக்கெட் தொழில்நுட்பங்கள் தொடர்பான ரகசியங்களை விற்பனை செய்ததாக, கடந்த 1994-ல் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து விஞ்ஞானி நம்பி நாராயணன் இஸ்ரோவிலிருந்து நீக்கப்பட்டார்.

தவறாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்காக, நஷ்ட ஈடு கோரி  நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ரூ.50 லட்சம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவருக்கு ரூ.50 லட்சத்தை கேரள மாநில அரசு வழங்கியது. அதற்கடுத்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டதன் பேரில் 10 லட்சம் வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிடக்கோரி, திருவனந்தபுரம் சார்பு நீதி மன்றத்தில் நம்பி நாராயணன் மனு தாக்கல் செய்தார். பின்னர் அவருக்கு கூடுதலாக ரூ.1 கோடியே 30 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கேரள முன்னாள் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையிலான குழு சிபாரிசின் அடிப்படையில், நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேரள அரசு வழங்கியது. 


Next Story