எம்.எல்.ஏ உறவினரின் பேஸ்புக் பதிவால் பெங்களூருவில் வன்முறை: 2 பேர் உயிரிழப்பு


எம்.எல்.ஏ உறவினரின் பேஸ்புக் பதிவால் பெங்களூருவில் வன்முறை:  2 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Aug 2020 1:05 AM GMT (Updated: 12 Aug 2020 4:57 AM GMT)

கர்நாடகாவில் எம்.எல்.ஏ உறவினர் வெளியிட்ட பேஸ்புக் பதிவால் வன்முறை வெடித்தது.

பெங்களூரு,

கர்நாடகாவில் உள்ள புலிகேசி நகர் தொகுதி எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவின் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த மக்கள்  எம்.எல்.ஏ அகண்ட மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. எம்.எல்.ஏவின் உறவினரான நவீனை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எம்.எல்.ஏவின் வீடு மீதும் கற்களை வீசினர். தொடர்ந்து  அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் தீ வைக்கப்பட்டன. 

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் வன்முறையைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடியடியும் நடத்தி கூட்டத்தை கலைத்தனர். எனினும், வன்முறை கட்டுக்குள் வராததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.  முன்னதாக வன்முறையில் 2 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். 

சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ உறவினர் நவீன் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகர கமிஷனர் தெரிவித்தார்.  வன்முறையை தொடர்ந்து பெங்களூருவின் டிஜே ஹல்லி  மற்றும் கேஜி ஹல்லி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக 110-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story