இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 67 ஆயிரம் பேருக்கு தொற்று: பலி எண்ணிக்கையும் உயர்ந்தது


இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 67 ஆயிரம் பேருக்கு தொற்று: பலி எண்ணிக்கையும் உயர்ந்தது
x
தினத்தந்தி 13 Aug 2020 10:15 PM GMT (Updated: 13 Aug 2020 9:39 PM GMT)

இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 67 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் என்னும் கண்ணுக்கு தெரியாத எதிரியின் தாக்குதல், உலக நாடுகளையெல்லாம் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

உலகளவில் 2 கோடியே 6 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உடல்களுக்குள் புகுந்துள்ள இந்த தொற்று, 7 லட்சத்து 49 ஆயிரத்து 424 பேரை நேற்று மதியம் வரை கொன்றிருக்கிறது.

அமெரிக்காவில் 51 லட்சத்து 97 ஆயிரத்து 377 பேரை பாதித்துள்ள இந்த வைரஸ், அங்கு 1 லட்சத்து 66 ஆயிரத்து 27 பேரை தனக்கு இரையாக்கி உள்ளது.

அதற்கு அடுத்த நிலையில் உள்ள பிரேசிலில் 31 லட்சத்து 61 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோரை தன் பிடியில் சிக்க வைத்துள்ள கொரோனா, 1 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்றுள்ளது. மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது.

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் புதிய உச்சமாக 66 ஆயிரத்து 999 பேரை இந்த தொற்று பாதித்துள்ளது.

இதனால் தொற்று பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கையானது, 23 லட்சத்து 96 ஆயிரத்து 637 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று நோயின் பரவல் மீண்டும் வேகம் எடுத்து இருப்பது மக்கள் முகங்களில் கவலை ரேகைகளை படியச்செய்துள்ளது. அதே நேரத்தில் நாட்டில் கொரோனா பரிசோதனைகள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 12-ந் தேதி வரையில் 2 கோடியே 68 லட்சத்து 45 ஆயிரத்து 688 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன.

நேற்று பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் கொரோனாவால் 834 பேர் மட்டுமே பலியாகி இருந்தனர். நேற்று இந்த எண்ணிக்கை 942 ஆக அதிகரித்தது. இதன்காரணமாக நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு இரையானோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 33 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று பலியான 942 பேரில் 344 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் 112 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஆந்திராவில் 93, உத்தரபிரதேசத்திலும், மேற்கு வங்காளத்திலும் தலா 54, பஞ்சாப்பில் 39, குஜராத்தில் 18, மத்திய பிரதேசத்தில் 15, டெல்லியில் 14, தெலுங்கானாவிலும், ராஜஸ்தானிலும் தலா 11 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஒடிசாவில் 9 பேரும், ஜம்மு காஷ்மீரில் 8 பேரும், அசாமிலும், கேரளாவிலும் தலா 6 பேரும், சத்தீஷ்காரிலும், ஜார்கண்டிலும், புதுச்சேரியிலும் தலா 5 பேரும், உத்தரகாண்டில் 4 பேரும், பீகாரிலும், கோவாவிலும், அரியானாவிலும் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இரையாகி இருக்கிறார்கள்.

மொத்தம் பலியான 47 ஆயிரத்து 33 பேரில், மராட்டியம் முதல் இடத்தில் (18 ஆயிரத்து 650 பேர்) தொடர்கிறது. இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. மூன்றாம் இடம் வகிக்கிற டெல்லியில் 4,153 பேர் பலியாகி உள்ளனர்.

மற்ற மாநிலங்களை பொறுத்தமட்டில், கர்நாடகத்தில் 3,510, குஜராத்தில் 2,713, ஆந்திராவில் 2,296, உத்தரபிரதேசத்தில் 2,230, மேற்கு வங்காளத்தில் 2,203, மத்திய பிரதேசத்தில் 1,048, ராஜஸ்தானில் 822, பஞ்சாப்பில் 675, தெலுங்கானாவில் 665, அரியானாவில் 503, ஜம்மு காஷ்மீரில் 498, பீகாரில் 416, ஒடிசாவில் 305, ஜார்கண்டில் 197, அசாமில் 161, உத்தரகாண்டில் 140, கேரளாவில் 126, சத்தீஷ்காரில் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் 96 பேரும், கோவாவில் 89 பேரும், திரிபுராவில் 44 பேரும், சண்டிகாரில் 26 பேரும், அந்தமான் நிகோபாரில் 21 பேரும், இமாசலபிரதேசத்தில் 18 பேரும், மணிப்பூரில் 12 பேரும், லடாக்கில் 9 பேரும், நாகலாந்தில் 8 பேரும், மேகாலயாவில் 6 பேரும், அருணாசல பிரதேசத்தில் 3 பேரும், தத்ராநகர் ஹவேலி தாமன்தியுவில் 2 பேரும், சிக்கிமில் ஒருவரும் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.

ஆனாலும் இறப்பு வீதம் என்பது 1.96 சதவீதமாக குறைந்திருப்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 16 லட்சத்து 95 ஆயிரத்து 982 ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.


Next Story