ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு: 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு
ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரை டெல்லி சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு விடுதலை செய்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஐகோர்ட்டில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரஜேஷ் சேத்தி வருகிற நவம்பர் 30-ந்தேதி ஓய்வு பெற உள்ளார். எனவே இந்த வழக்கை விரைவாக விசாரிக்கக்கேட்டு நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி முன் நேற்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘இந்த வழக்கில் நீதிபதி சேத்தி முன் கணிசமான காலம் வாதம் செய்யப்பட்டு உள்ளது. அவர் ஓய்வு பெறுமுன் இந்த வழக்கில் விசாரணை முடிக்கப்படவில்லை என்றால் கோர்ட்டு நேரம் வீணடிக்கப்பட்டதாகி விடும். எனவே இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். மேலும் எதிர் மனுதாரர்களின் வாதத்தையும் விரைவில் முடிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதற்கு நீதிபதி பம்பானி, இந்த வழக்கு விசாரணை நீதிபதி சேத்தி முன் நிலுவையில் இருப்பதால், இந்த மனுவும் அவருக்கு முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டினார். எனினும் தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு உட்பட்டு இந்த விவகாரம் 17-ந்தேதி நீதிபதி சேத்தி முன் வைக்கப்பட வேண்டும் என தனது உத்தரவில் தெரிவித்தார்.
Related Tags :
Next Story