ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி


ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
x
தினத்தந்தி 14 Aug 2020 11:14 AM GMT (Updated: 14 Aug 2020 11:14 AM GMT)

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் முதல்-மந்தரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.  சச்சின் பைலட்டுக்கும், கெலாட்டுக்கும் ஏற்பட்ட அதிகார மோதல் விளைவாக பைலட்டின் துணை முதல் மந்திரி பதவி கடந்த ஜூலை மாதம் 14ந்தேதி பறிக்கப்பட்டது.  அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் மந்திரி பதவியும் பறிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் பைலட் செயல்படுகிறார் என்றும், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க போகிறார் என்றும் யூகங்கள் கிளம்பின.  ஆனால் இதற்கு பைலட் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.  கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த சர்ச்சையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

சச்சின் பைலட், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்புக்கு பின்னர் சமரசம் ஏற்பட்டது.  இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நேற்று மாலை 5 மணிக்கு முதல் மந்திரி அசோக் கெலாட்டின் இல்லத்தில் அவரது தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடப்பட்டது.

இதனையேற்று சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கெலாட்டின் வீட்டிற்கு சென்றனர்.  சச்சின் பைலட்டை அசோக் கெலாட் இன்முகத்துடன் வரவேற்றார்.  இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.  இதன்பின்னர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.  இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு முடிவுக்கு வந்தது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என கூறினார்.  இதன்படி, ராஜஸ்தான் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான முன்மொழிவை சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகார மந்திரி சாந்தி குமார் தாரிவால் இன்று மதியம் 1 மணியளவில் தாக்கல் செய்துள்ளார்.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன் உறுப்பினர்கள் முன்னிலையில் கெலாட் பேசும்பொழுது, நாட்டில் அமலாக்க துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரி துறை போன்றவை தவறாக பயன்படுத்தப்படவில்லையா? தொலைபேசியில் நீங்கள் தொடர்பு கொண்டு பேசும்பொழுது, மற்றொரு நபரையும் வாட்ஸ்அப்பில் இணைந்து கொள்ளும்படி கூறவில்லையா? ஜனநாயக நாட்டில் இது ஒரு நல்ல விசயமா? என அவர் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

இதன்பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.  இதனால் ராஜஸ்தானில் ஆட்சி கவிழ்வதில் இருந்து காங்கிரஸ் அரசு தப்பியுள்ளது.

Next Story