புனே, சத்தாராவுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ - வானிலை ஆய்வு மையம்


புனே, சத்தாராவுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 17 Aug 2020 9:15 AM GMT (Updated: 17 Aug 2020 9:15 AM GMT)

புனே, சத்தாராவில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டு உள்ளது. மும்பையிலும் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை, 

சமீபத்தில் பெய்த மழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் புனே, சத்தாரா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் இன்று(திங்கட்கிழமை) மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மேற்கு மராட்டியத்தில் உள்ள புனே, கோலாப்பூர், சத்தாரா மற்றும் சாங்கிலி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சத்தாரா மற்றும் புனே மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும்.

வடக்கு, மத்திய மற்றும் விதர்பா மண்டலங்களில் வரும் வியாழக்கிழமை வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் மும்பை, ராய்காட் மற்றும் பால்கர் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது. இங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மழையின் தீவிரம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 20.45 செ.மீ. மழை பதிவானால் அது மிக கனமழை என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

Next Story