முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை - ராணுவ மருத்துவமனை


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை  - ராணுவ மருத்துவமனை
x
தினத்தந்தி 18 Aug 2020 6:38 AM GMT (Updated: 18 Aug 2020 6:38 AM GMT)

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராணுவ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதுடெல்லி,

டெல்லியில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த 9-ந் தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். இதில் அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டி மறுநாள் டெல்லி ராணுவ ஆர்.ஆர். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. முன்னதாக அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு வென்டிலேட்டர் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், திடீரென கடந்த 13-ந் தேதி அவர் கோமாவுக்கு சென்றார்.

அதன் பின்னர் அவரது உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து அவர் வென்டிலேட்டர் ஆதரவிலேயே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் ராணுவ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது. அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், வென்டிலேட்டர் ஆதரவில்தான் தொடர்ந்து இருப்பதாகவும் கூறியுள்ள டாக்டர்கள், எனினும் பிரணாப் முகர்ஜியின் முக்கிய உறுப்புகளின் இயக்கம் மற்றும் சிகிச்சை செயல்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து சீராக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராணுவ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும்  பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை முடித்து ஒரு வாரம் கடந்த பின்னரும் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாதது, அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story