தங்க கடத்தல் வழக்கு; ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி


தங்க கடத்தல் வழக்கு; ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 21 Aug 2020 7:14 AM GMT (Updated: 21 Aug 2020 7:14 AM GMT)

கேரள தங்க கடத்தல் வழக்கில் காவலில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

திருவனந்தபுரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் அண்மையில் பெங்களூருவில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஸ்வப்னாவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது. தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்கு தொடர்பில்லை. ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாகவே தங்கம் கொண்டு வரப்பட்டுள்ளது என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறினார்.

அதிகாரிகளின் விசாரணையில், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடன் தங்கம் கடத்தப்பட்டதாக ஸ்வப்னா வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் கார்கோ விமானத்தில் காய்கறிகள் கொண்டு செல்லும் கண்டெய்னர்கள் மூலம் பணம், நகை கடத்தப்பட்டதாக ஸ்வப்னா தகவல் அளித்துள்ளார். இதனால் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கும் தொடர்புடையதால் விசாரணை தீவரமடைந்துள்ளது.

இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட சந்தீப் நாயர் ஆகியோரை இந்த மாதம் 21ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், இன்றுடன் அந்த காவல் முடிவடைகிறது.

இந்நிலையில், எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம், தங்க கடத்தல் வழக்கில் ஜாமீன் கோரியிருந்த ஸ்வப்னாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story