சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணை தீவிரம்
தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.
மும்பை,
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் அவரது தந்தை பாட்னா போலீசில் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது புகார் அளித்தார். அதில் ரியா தனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாகவும் மற்றும் பணமோசடி செய்ததாகவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் வந்து உள்ளது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டும் நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று மாலை சி.பி.ஐ. போலீசார் மும்பை வந்தனர். அவர்கள் 10 நாட்கள் மும்பையில் முகாமிட்டு விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை பந்த்ராவில் உள்ள காவல் நிலையம் வந்த சிபிஐ அதிகாரிகள், வழக்கு குறித்த ஆவணங்களை பெற்றதாக தெரிகிறது. தொடர்ந்து அங்கிருந்து சுஷாந்த் சிங் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்தனர். வீட்டில் உள்ளவர்கள் மற்றும் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சூழல் ஆகியவை பற்றி சிபிஐ அதிகாரிகள் விசாரிப்பார்கள் எனத்தெரிகிறது. மும்பை போலீசாரும் சுஷாந்த் சிங் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.
Related Tags :
Next Story