ராகுல் காந்தி உடனடியாக தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்: காங். மூத்த தலைவர் அகமது படேல் வலியுறுத்தல்


ராகுல் காந்தி உடனடியாக தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்: காங். மூத்த தலைவர் அகமது படேல் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Aug 2020 11:25 AM GMT (Updated: 24 Aug 2020 11:25 AM GMT)

ராகுல் காந்தி உடனடியாக தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று காங். மூத்த தலைவர் அகமது படேல் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும், கட்சியில் பல்வேறு சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருந்தனர். இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடத்தப்பட்டது.

இதில் பேசிய சோனியா காந்தி, இடைக்காலத் தலைவர் பதவியை தொடர தான் விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே. ஆண்டனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலர், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கட்சித் தலைவர் பதவியை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் பாஜவுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், உடனடியாக அந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே மறுத்து கருத்து தெரிவித்தனர். 

இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது படேல், அதிருப்தியாளர்களை மறைமுகமாக சாடினார். மேலும், குலாம் நபி  ஆசாத், முகுல் வாஸ்னிக், ஆனந்த் சர்மா ஆகியோரை பெயர் குறிப்பிட்டு பேசிய அகமது படேல், முக்கிய பொறுப்புகளில் இருந்துகொண்டு இதுபோன்ற கடிதங்களை எழுதியிருக்கக் கூடாது எனவும் ராகுல் காந்தி எந்த தாமதமும் இன்றி உடனடியாக கட்சி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் பேசினார். 

Next Story