நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: செப்டம்பர் 14-ம் தேதி கூடுகிறது


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: செப்டம்பர் 14-ம் தேதி கூடுகிறது
x
தினத்தந்தி 25 Aug 2020 3:45 PM GMT (Updated: 25 Aug 2020 3:45 PM GMT)

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 14-ம் தேதி கூடுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
 
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பெரும்பாலும் ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நடத்தப்படும். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு இன்னும் கூட்டத்தொடரை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடர் கூட கடந்த மே மாதம் 23-ம் தேதி முன்கூட்டியே முடிக்கப்பட்டு இருந்தது.

எனினும் இரு தொடர்களுக்கு இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது என்பதால், மழைக்கால கூட்டத்தொடரை விரைவில் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்த தொடர் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி கூடுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கூட்டத்தொடரின் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவைப் போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. 

இரு அவைகளிலும் உறுப்பினர்களுக்கு இருக்கை அமைப்பதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் முதன்முறையாக பெரிய திரைகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story