இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 34 லட்சத்தை நெருங்குகிறது; குணம் அடைந்தோர் எண்ணிக்கை 26 லட்சத்தை எட்டுகிறது


இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 34 லட்சத்தை நெருங்குகிறது; குணம் அடைந்தோர் எண்ணிக்கை 26 லட்சத்தை எட்டுகிறது
x
தினத்தந்தி 28 Aug 2020 11:48 PM GMT (Updated: 28 Aug 2020 11:48 PM GMT)

இந்தியாவில் ஒரே நாளில் 77 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கிறது. மொத்த பாதிப்பு 34 லட்சத்தை நெருங்குகிறது. குணம் அடைந்தோர் எணணிக்கை 26 லட்சத்தை எட்டுகிறது.

புதுடெல்லி,

கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் தொற்று பரவல், இந்தியாவில் கடந்த சில நாட்களாக ‘ஜெட்’ வேகத்தில் இருக்கிறது. பாதிப்பில் உலகில் 3-ம் இடத்தில் இந்தியா என்னும் நிலையில், நேற்று காலை 8 மணி நிலவரப்படி புதிதாக 77 ஆயிரத்து 266 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33 லட்சத்து 87 ஆயிரத்து 500 ஆக உள்ளது. இன்று இந்த எண்ணிக்கை 34 லட்சத்தை கடந்து விடும். அதிகபட்சமாக மராட்டியத்தில் 7.33 லட்சம் பேருக்கும், ஆந்திராவில் 3.93 லட்சம் பேருக்கும் தொற்று பாதிப்பு பதிவாகி இருக்கிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று பரிசோதனையும் பெருகிக்கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 9 லட்சத்து 1,338 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில்தான், நேற்று 77 ஆயிரத்து 266 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நாட்டில் 3 கோடியே 94 லட்சத்து 77 ஆயிரத்து 848 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக கொரோனாவுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இரையாகி உள்ளனர். அந்த வரிசையில் நேற்று 1,057 பேர் பலியாகி உள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் மட்டுமே 355 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருப்பது அங்குள்ள மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாவது கூடுதல் பலியை தமிழகம் சந்தித்துள்ளது. அதற்கு அடுத்த நிலையில், ஆந்திராவில் 92 பேர் இறந்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் 68, மேற்கு வங்காளத்தில் 53, பஞ்சாப்பில் 37, மத்திய பிரதேசத்தில் 24, டெல்லியில் 22, குஜராத்தில் 17, ஜம்மு காஷ்மீர் மற்றும் சத்தீஷ்காரில் தலா 14, ராஜஸ்தானில் 13, அரியானாவில் 12, தெலுங்கானா, ஜார்கண்டில் தலா 11, கேரளா மற்றும் புதுச்சேரியில் தலா 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

10-க்கும் கீழாக உயிர்ப்பலியை சந்தித்துள்ள மாநிலங்களாக, யூனியன் பிரதேசங்களாக உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, கோவா, அசாம், திரிபுரா, சண்டிகார், லடாக், அந்தமான் நிகோபார், இமாசல பிரதேசம் ஆகியவை உள்ளன.

நாட்டில் மொத்தம் 61 ஆயிரத்து 529 பேர் கொரோனாவுக்கு இதுவரை பலியாகி உள்ளனர். இவர்களில், 23 ஆயிரத்து 444 பேர் மராட்டிய மாநிலத்தினர். இதனால் அந்த மாநிலம், பலியில் முதல் இடத்தில் நீடிக்கிறது. அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. 3-ம் இடத்தில் உள்ள கர்நாடகத்தில் 5,232 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் பலி எண்ணிக்கை 4,369, ஆந்திராவில் 3,633, உத்தரபிரதேசத்தில் 3,217, மேற்குவங்காளத்தில் 3,017, குஜராத்தில் 2,962, மத்திய பிரதேசத்தில் 1,306, பஞ்சாப்பில் 1,256, ராஜஸ்தானில் 1,005 ஆக உள்ளது.

1000-க்கும் குறைவாக பலி கொண்ட மாநிலங்களாக, யூனியன் பிரதேசங்களாக தெலுங்கானா (799), ஜம்மு காஷ்மீர் (671), அரியானா (646), பீகார் (538), ஒடிசா (448), ஜார்கண்ட் (373), அசாம் (278), கேரளா (267), சத்தீஷ்கார் (245), உத்தரகாண்ட் (228), புதுச்சேரி (190), கோவா (171) ஆகியவை விளங்குகின்றன. எஞ்சிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பலி எண்ணிக்கை 100-க்கும் குறைவாக இருக்கிறது. இந்தியாவில் பலிவிகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது அது 1.82 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 177 பேர் கொரோனாவை வென்று, ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும்போது (56 ஆயிரத்து 13) இந்த எண்ணிக்கை அதிகம். மராட்டியத்தில் 9,136 பேரும், ஆந்திராவில் 8,528 பேரும், கர்நாடகத்தில் 7,866 பேரும் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி இருக்கிறார்கள்.

இதுவரையில் இந்தியாவில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்து 83 ஆயிரத்து 948 ஆக உள்ளது. இன்று இந்த எண்ணிக்கை 26 லட்சத்தை தாண்டி விடும். குணம் அடைந்தோர் விகிதம் 76.28 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தற்போது நாட்டில் கொரோனாவில் இருந்து மீள்வதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்து 42 ஆயிரத்து 23 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 21.90 சதவீதம் ஆகும். இந்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

உலகளவில் தொற்று பாதிப்பு 2.46 கோடியாகவும், இறப்பு 8.36 லட்சமாகவும் உள்ளது. அமெரிக்காவில் 60.51 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதில் 1.84 லட்சம் பேர் இறந்துள்ளனர். பிரேசிலில் 37.64 லட்சம் பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதில், 1.18 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர். இது நேற்று மதியம் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் வெளியிட்ட புள்ளி விவரம் ஆகும்.

Next Story