கொரோனா பாதிப்பு கடவுளின் செயல் என்றால், அதற்கு முந்தைய தவறான பொருளாதார நிர்வாகத்தை என்னவென்று சொல்வது? - ப.சிதம்பரம் கேள்வி


கொரோனா பாதிப்பு கடவுளின் செயல் என்றால், அதற்கு முந்தைய தவறான பொருளாதார நிர்வாகத்தை என்னவென்று சொல்வது? - ப.சிதம்பரம் கேள்வி
x
தினத்தந்தி 29 Aug 2020 8:24 PM GMT (Updated: 29 Aug 2020 8:24 PM GMT)

கொரோனா பாதிப்பு கடவுளின் செயல் என்றால், அதற்கு முந்தைய தவறான பொருளாதார நிர்வாகத்தை என்னவென்று சொல்வது? என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 41-வது கூட்டம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த 27-ந் தேதி காணொலி காட்சி வழியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “கொரோனா பாதிப்பு கடவுளின் செயல்” என குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது பற்றி முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் காட்டமான கேள்வி எழுப்பி உள்ளார்.

அவர் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “பெருந்தொற்று நோய் (கொரோனா) கடவுளின் செயல் என்றால், அதற்கு முன்பாக 2017-18, 2018-19, 2019-20 ஆண்டுகளின் தவறான பொருளாதார நிர்வாகத்தை என்னவென்று சொல்வது? கடவுளின் தூதராக நிதி மந்திரி தயவு செய்து பதில் அளிப்பாரா?” என கேட்டுள்ளார்.

நாட்டில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரிமுறையால் மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படுகிறபோது, அந்த இழப்பை ஜி.எஸ்.டி. சட்டப்படி மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும் என்பது விதி ஆகும்.

அந்த வகையில், நடப்பு நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டில் ரூ.3 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்படும் என மத்திய அரசு கணித்துள்ளது.

அதில் ரூ.65 ஆயிரம் கோடி, ஜி.எஸ்.டி. மீதான செஸ் வரியின் மூலம் சரிக்கட்டப்படும், மாநிலங்களுக்கு மீதி ரூ.2.35 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

இந்த ரூ.2.35 லட்சம் கோடியில், ரூ.97 ஆயிரம் கோடி, ஜி.எஸ்.டி. பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ளது, மீதி கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கத்தால் ஏற்பட்டிருக்கிறது என்று மத்திய அரசு கூறி உள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு 2 யோசனைகளை முன்வைத்துள்ளது.

ஒன்று, ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.97 ஆயிரம் கோடியை நியாயமான வட்டிக்கு மாநிலங்கள் கடன் வாங்க வேண்டும். இந்த தொகையை ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 5 ஆண்டுகளுக்கு பின்னர், அதாவது 2022-ம் ஆண்டு முடிவில் திருப்பிச்செலுத்த முடியும்.

இரண்டாவது, மொத்த தொகையான ரூ.2.35 லட்சம் கோடியையும் சிறப்பு திட்டத்தின்கீழ் கடனாக வாங்கலாம். இதுபற்றி மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் தெரிவிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றியும் ப.சிதம்பரம் விமர்சித்து உள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

* ஜி.எஸ்.டி. இழப்பீட்டை ஈடுகட்டுவதற்கு மத்திய அரசு 2 யோசனைகளை கூறி உள்ளது. இது மொத்தமாக சட்டத்தை மீறுவது ஆகும். அது மட்டுமின்றி, மத்திய அரசு தனது பொறுப்பை துறப்பதும் ஆகும்.

* எந்தவொரு நிதி பொறுப்பில் இருந்தும் மத்திய அரசு தன்னை விடுவித்துக்கொள்கிறது. இது முழு துரோகம். மேலும், சட்டத்தை நேரடியாக மீறுவதும் ஆகும்.

* இரண்டாவது யோசனைப்படி, ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநிலங்கள் கடன் வாங்கிக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. இது வேறு பெயரிலான சந்தை கடன்தான். மறுபடியும் முழு நிதிச்சுமையும் மாநிலங்களின் மீதுதான் விழுகிறது.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

Next Story