நாடாளுமன்ற விசாரணை வேண்டும்: பா.ஜனதா கட்டுப்பாட்டில் ‘வாட்ஸ் அப்’? - காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு


நாடாளுமன்ற விசாரணை வேண்டும்: பா.ஜனதா கட்டுப்பாட்டில் ‘வாட்ஸ் அப்’? - காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Aug 2020 1:14 AM GMT (Updated: 30 Aug 2020 1:14 AM GMT)

பா.ஜனதா கட்டுப்பாட்டில் வாட்ஸ் அப் விவகாரத்தில் நாடாளுமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறித்தி உள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் ‘வாட்ஸ் அப் சமூக ஊடகம், மத்திய பா.ஜனதா அரசினால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது. அதில் ‘வாட்ஸ்-அப்’பின் மூத்த நிர்வாகி சிவநாத் துக்ரால், ஆளும் கட்சியின் (பா.ஜனதா) தடையில்லா பக்தர், அவர் தொழில் முறை நடத்தையில் பாரபட்சமாக நடந்து கொண்டு உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த பிரச்சினையை இப்போது காங்கிரஸ் கட்சி கையில் எடுத்து இருக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் பவன் கெரா, பிரவிண் சக்கரவர்த்தி ஆகியோர், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினர்.

அப்போது அவர்கள், “ஒரு அரசியல் கட்சியால் (பா.ஜனதா) முறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகிற வாட்ஸ் அப்பை 40 கோடி இந்தியர்கள் நம்ப முடியுமா? வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் 40 கோடி இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்கள், பரிமாற்ற விவரங்கள், தனிப்பட்ட தகவல்கள் ஆகியவை பா.ஜனதாவுடன் பகிரப்படவில்லை, தவறாக பயன்படுத்தப்படவிலலை என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?” என கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். ஏற்கனவே அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் பத்திரிகை, சமூக ஊடக நிறுவனமான ‘பேஸ்புக்’ தனது தளத்தில் பா.ஜனதா தலைவர்களின் வெறுப்புணர்வு மற்றும் வகுப்புவாத பதிவுகளை அனுமதிப்பதாக தகவல் வெளியிட்டு, அதை காங்கிரஸ் பிரச்சினையாக்கிய நிலையில், இப்போது அதே ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் அங்கமான ‘வாட்ஸ் அப்’ மீதும் பிரச்சினை எழுப்பி இருப்பது கவனத்தை ஈர்க்கிறது.

Next Story