மத்திய பிரதேச வெள்ள பாதிப்பு; 2வது நாளாக ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார் முதல் மந்திரி


மத்திய பிரதேச வெள்ள பாதிப்பு; 2வது நாளாக ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார் முதல் மந்திரி
x
தினத்தந்தி 30 Aug 2020 10:47 AM GMT (Updated: 30 Aug 2020 10:47 AM GMT)

மத்திய பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் 2வது நாளாக ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

போபால்,

நாட்டின் வடமாநிலங்களில் பருவகால மழை பெய்து வருகிறது.  தொடர் கனமழையால், மராட்டியம், ஒடிசா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில மக்கள் வெள்ள பாதிப்புகளில் சிக்கி பரிதவித்து வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நர்மதா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  ஆபத்து அளவை மீறி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  இதனால் மாநிலத்தின் ஆற்று கரையோரம் அமைந்த மாவட்ட மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இவற்றில் ஹோசங்காபாத் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் வெள்ள நீரால் சூழ்ந்து காணப்படுகின்றன.

இதனை தொடர்ந்து வெள்ள நிலைமையை கண்காணிக்க முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஹோசங்காபாத் மாவட்டத்தில் நேற்று ஹெலிகாப்டர் ஒன்றில் புறப்பட்டு வான்வழியே சென்று பார்வையிட்டார்.

மத்திய பிரதேசத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக ராணுவத்தினருக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது.  இதுவரை தேசிய பேரிடர் பொறுப்பு படையின் 2 குழுக்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.  கூடுதலாக 2 குழுக்களுக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது.

தொடர்ந்து மழை பெய்ய கூடும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.  இந்நிலையில், முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று 2வது நாளாக மத்திய பிரதேசத்தின் விதிசா நகரில் ஹெலிகாப்டரில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.

வெள்ள நிலைமை பற்றி பிரதமர் மோடியை இன்று காலை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு சவுகான் விளக்கம் அளித்துள்ளார்.  இதேபோன்று மாநிலத்தில் வெள்ள பாதிப்பு பற்றி இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

Next Story