முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனை


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனை
x
தினத்தந்தி 31 Aug 2020 5:09 AM GMT (Updated: 31 Aug 2020 5:09 AM GMT)

பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது

புதுடெல்லி,

டெல்லியில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84). கடந்த 9-ந்தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். எனவே அவர் மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே டாக்டர்கள் 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து அதை அகற்றினர். ஆனால் ஆபரேஷனுக்குப் பிறகு பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்தது. எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்ற பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

இந்த நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் ஷாக் ஏற்பட்டு உடல் நிலை கடும் பின்னடைவு அடைந்து இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஆழ்ந்த கோமா நிலையிலேயே உள்ள  பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையை  மருத்துவக் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

Next Story