முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
x
தினத்தந்தி 31 Aug 2020 1:32 PM GMT (Updated: 31 Aug 2020 1:32 PM GMT)

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொரோனா பாதிப்புக்காக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலமானார்.  அவருக்கு வயது 84.  கடந்த 9ந்தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்த அவர் மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே டாக்டர்கள் 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து அதை அகற்றினர். ஆனால் ஆபரேஷனுக்கு பிறகு பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்தது.

எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்ற பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் ஷாக் ஏற்பட்டு உடல் நிலை கடும் பின்னடைவு அடைந்து இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்தது. ஆழ்ந்த கோமா நிலையிலேயே இருந்த பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையை மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வந்தது.

இவற்றுக்கிடையே கொரோனா பாதிப்புக்கும் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று காலமானார்.  இதனை அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி உள்ளார்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளனர்.  இதுபற்றி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்.  அவரது மறைவால் ஒரு சகாப்தம் கடந்து விட்டது.  பொது வாழ்வில் மதிப்பு மிக்க மனிதர்.

ஒரு முனிவரின் மனநிலையுடன் இந்திய தாய்க்கு சேவையாற்றியுள்ளார்.  தனது மதிப்புமிக்க மகன்களில் ஒருவரை இழந்ததற்காக இந்த நாடு துக்கப்படுகிறது.  அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைத்து குடிமகன்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாரத் ரத்னா பிரணாப் முகர்ஜி மறைவுக்கு இந்திய நாடு வருந்துகிறது.  நமது நாட்டின் வளர்ச்சி பாதையில் அழியாத அடையாளம் ஒன்றை அவர் விட்டு சென்றுள்ளார்.  சிறந்த பண்டிதர், உயர்ந்த அரசியல்வாதி, அரசியல் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினராலும் ஈர்க்கப்பட்டவர் என தெரிவித்து உள்ளார்.

Next Story