கர்நாடகாவில் 1,350 கிலோ போதை பொருள் பறிமுதல்


கர்நாடகாவில் 1,350 கிலோ போதை பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Sep 2020 4:58 PM GMT (Updated: 10 Sep 2020 4:58 PM GMT)

கர்நாடகாவில் 1,350 கிலோ போதை பொருளை பதுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கலபுரகி,

கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் கால்கி பகுதியில் பண்ணை ஒன்று அமைந்துள்ளது.  பெங்களூரு நகர மத்திய பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பண்ணையில் சோதனை நடத்தப்பட்டது.

இதில், பண்ணையில் நிலத்திற்கு அடியில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.  அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  இந்த விவகாரத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் திருவனந்தபுரம் நகரில் அட்டிங்கல் பகுதி அருகே 500 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை கடத்த முற்படும்பொழுது, கலால் துறையின் கீழ் செயல்படும் கேரள அமலாக்க அதிரடி படையினர் அவற்றை கைப்பற்றினர்.

இந்த விவகாரத்தில் 2 பேரை கைது செய்துள்ளனர்.  அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.  இதேபோன்று, கடந்த சில மாதங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.  இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுபற்றி அமலாக்க துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதனை தொடர்ந்து, பெங்களூருவில் போதை பொருட்கள் பயன்பாடு பற்றி கடந்த சில நாட்களாக விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் 1,350 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Next Story