ஒட்டுமொத்த அவையும் நமது நாட்டின் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக உள்ளது - பிரதமர் மோடி உரை


ஒட்டுமொத்த அவையும் நமது நாட்டின் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக உள்ளது - பிரதமர் மோடி உரை
x
தினத்தந்தி 14 Sep 2020 9:56 AM GMT (Updated: 14 Sep 2020 9:56 AM GMT)

ஒட்டுமொத்த நாடாளுமன்ற அவையும், ஒரு மனதாக, நமது நாட்டின் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் பருவமழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது.

காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியது. அப்போது பிரதமர் மோடி மற்றும் எம்பிக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் மறைந்த தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, புகழ்பெற்ற இந்திய கிளாசிக்கல் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ், முன்னாள் சத்தீஸ்கார் முதல்வர் அஜித் ஜோகி, மத்திய பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன், உத்தரபிரதேச  அமைச்சர்கள் கமல் ராணி, சேதன் சவுகான் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராகுவன்ஷ் பிரசாத் சிங் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து  அவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட அவர் மீண்டும் கூடியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பிரதமர் ஆற்றிய உரையில்,

சிறப்பான சூழலில், நாடாளுமன்றக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. ஒரு பக்கம், கொரோனா தொற்று, மறுபக்கம் நமது கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது அனைத்து எம்.பி.க்களும் கடமை ஆற்ற வந்துள்ளனர். இந்த முயற்சிக்காக, உங்களைப் பாராட்டுகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா ஏற்படுத்தியுள்ள தற்போதைய சூழ்நிலையின் கீழ், நாம் முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதற்கு ஒரு மருந்து வரும் வரை, நமது அணுகுமுறையில் எந்த தளர்வும் இருக்க முடியாது. உலகின் ஏதாவது ஒரு இடத்திலிருந்து கூடிய விரைவில், தடுப்பூசி வரும் என நாம் நம்புகிறோம். இந்த முயற்சியில் நமது விஞ்ஞானிகளும் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த நெருக்கடியில் இருந்து நாம் கூடிய விரைவில் மீள முடியும்.

இந்த அவைக்கு, குறிப்பாக இந்த கூட்டத் தொடரில், மற்றொரு முக்கியமான பொறுப்பு நமக்கு உள்ளது. நமது ராணுவ வீரர்கள் எல்லையில் கடினமான சூழலில், உற்சாகத்துடன் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மழையும் இன்னும் சில நாளில் தொடங்கவுள்ளது.

தாய்நாட்டைக் காக்க வேண்டும் என்ற உறுதியுடன் எல்லையில் நமது வீரர்கள் நம்பிக்கையுடன் இருப்பது போல், இந்த அவையும், உறுப்பினர்களும், ஒருமித்தக் குரலில், நாடு ராணுவத்துக்கு ஆதரவாக உள்ளது என்ற தகவலைத் தெரிவிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த அவையும், ஒரு மனதாக, நமது நாட்டின் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக உள்ளது. இந்த வலுவான தகவலை, இந்த அவையும், உறுப்பினர்களும் தெரிவிப்பர் என நம்புகிறேன். கொரோனா சமயத்தில், நீங்கள் முன்பு போல் சுதந்திரமாக வெளியில் செல்ல முடியாது.

உங்களையும், உங்கள் நண்பர்களையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அனைத்து தகவல்களும் கிடைக்கும். நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு, எனது தனிப்பட்ட வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.

Next Story