அபராத தொகையை செலுத்த அனுமதிக்க கோரி சசிகலா மனுத்தாக்கல்


அபராத தொகையை செலுத்த அனுமதிக்க கோரி சசிகலா மனுத்தாக்கல்
x
தினத்தந்தி 16 Sep 2020 12:31 PM GMT (Updated: 16 Sep 2020 12:31 PM GMT)

சொத்து குவிப்பு சிறையில் உள்ள சசிகலா தனது அபராதத் தொகையை செலுத்த அனுமதி கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதியில் இருந்து அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார். அவரது தண்டனை காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில் சசிகலா விடுதலை குறித்து செய்திகள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த டி.நரசிம்மமூர்த்தி என்பவர், சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அவரது கேள்விக்கு கடிதம் மூலம் பதிலளித்த பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டு ஆர்.லதா, “சிறை ஆவணங்கள்படி சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள அபராதத்தொகையை செலுத்தினால், சசிகலா அனேகமாக அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலை ஆகலாம்.

அபராதத்தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் 13 மாதங்கள் அதாவது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், அவர் பரோல் காலத்தை பயன்படுத்தினால், அவர் விடுதலை செய்யப்படும் தேதியில் மாற்றம் ஏற்படலாம்” என்று கூறியுள்ளார். இதற்கிடையில் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் இந்த மாத இறுதியில் சசிகலா விடுதலை ஆவார் என்று கூறி உள்ளார்.

இந்த நிலையில், வழக்கமாக நடைமுறைகளின்படி, அபராதத் தொகையை செலுத்த அனுமதிக்க கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே, தனது அபராதத் தொகை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் சுதாகரன் செலுத்தியுள்ள நிலையில், சசிகலாவும் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story