மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களுக்கு அ.தி.மு.க. எம்.பி. எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு


மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களுக்கு அ.தி.மு.க. எம்.பி. எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Sep 2020 12:00 AM GMT (Updated: 20 Sep 2020 11:38 PM GMT)

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி,

விவசாய விளைபொருட் கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய இரு மசோதாக்களையும் மத்திய அரசு நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்தது.

இந்த மசோதாக்களுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்து இருக்கும் நிலையில், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் பேசுகையில் கூறியதாவது:-

இந்த மசோதா பல சந்தேகங்களை உருவாக்குகிறது. இந்த மசோதாக்களை அவசர அவசரமாக கொண்டுவர வேண்டியதின் அவசியம் என்ன என்பதை விளக்க வேண்டும். இந்த மசோதாவால் விவசாயிகள் மத்தியில் ஒரு அச்சம் நிலவுகிறது. சட்ட முன்வடிவு மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் இந்த மசோதாவில் எதுவும் கூறப்படவில்லை.

வணிகர்கள் விவசாயிகளை மிரட்டியே பொருட்களை வாங்கி விடுவார்கள். இதனால்தான் பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் இந்த மசோதாவை விவசாயிகள் எதிர்க்கிறார்கள். இது முற்றிலும் உண்மை. இதுவெல்லாம் மசோதாவில் சரி செய்யப்படவில்லை.

இதுபோன்ற விஷயங்கள் தொடர்ந்தால் விவசாயம் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் போய்விடும். விவசாயிகள் எல்லாம் கூலித்தொழிலாளர்களாக மாறி விடும் சூழ்நிலை உருவாகும். இது போன்ற நிலை உருவாகாமல் மத்திய அரசு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story