மராட்டியத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது- 8 பேர் பலி, இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
கட்டிட இடிபாடுகளில் இருந்து 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தானே,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்ட் என்ற இடத்தில் அமைந்துள்ள 3 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அதிகாலை 3.30 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததால், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
கட்டிட இடிபாடுகளில் 20 முதல் 25 பேர் வரை சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இடிந்து விழுந்த கட்டிடத்தில் 21 பிளாட்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் சொல்லப்படுவதால், இடிபாடுகளில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனவும் பேசப்படுகிறது. இதற்கிடையே, இடிபாடுகளில் இருந்து 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
20 பேரை உள்ளூர் மக்களே பத்திரமாக மீட்டனர். எனினும் தொடர்ந்து இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா? என மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 20 முதல் 25 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story