பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று


பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 21 Sep 2020 11:15 PM GMT (Updated: 21 Sep 2020 9:31 PM GMT)

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து உள்ளனர். நாட்டின் கொரோனா இறப்பு விகிதமும் 1.6 ஆக சரிந்துள்ளது.

புதுடெல்லி,

உலக அளவில் அதிக கொரோனா பாதிப்பை பெற்றிருக்கும் நாடுகளில் 2-வது இடத்தை பெற்றிருக்கும் இந்தியா தொடர்ந்து அந்த இடத்திலேயே நீடிக்கிறது. இங்கு தினமும் அதிக எண்ணிக்கையில் புதிய தொற்று பதிவு செய்யப்படுவதால் அமெரிக்காவுக்கு அடுத்ததாக அதிக பாதிப்பை பெற்றிருக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. இது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

அதேநேரம் தினசரி தொற்று எண்ணிக்கைக்கு நிகராகவும், அதைவிட மேலாகவும் குணமடைவோர் எண்ணிக்கை இருந்து வருகிறது. இதனால் தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியாதான் முதலிடத்தை பெற்றிருக்கிறது. தினமும் அதிக அளவிலான குணமடைந்தோர் எண்ணிக்கையை பெறுவதால் அரசும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 93 ஆயிரத்து 356 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தொடர்ந்து 3 நாளாக 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதன் மூலம் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 43 லட்சத்து 96 ஆயிரத்து 399 ஆக அதிகரித்து உள்ளது. இது உலக அளவில் குணமடைந்தவர் எண்ணிக்கையில் 19 சதவீதமாகும். அதேநேரம் இந்திய அளவில் கொரோனாவை வென்றவர்களின் எண்ணிக்கை 80.12 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

பரிசோதனை அதிகரிப்பு, விரைவில் தொற்று கண்டறிதல், உடனடி தனிமைப்படுத்தல், சிறப்பான சிகிச்சை முறையால் இந்த சாதனையை இந்தியா சாத்தியப்படுத்தி வருகிறது. தற்போதைய நிலையில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 299 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 18.28 சதவீதம் ஆகும்.

புதிதாக தொற்றை வென்றவர்களில் 79 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதைப்போல 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேசிய விகிதத்தை விட அதிக குணமடைந்தவர் விகிதத்தை பெற்றுள்ளன.

இதற்கிடையே நாடு முழுவதும் மேற்படி 24 மணி நேரத்தில் புதிதாக 86 ஆயிரத்து 961 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அந்தவகையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்து 87 ஆயிரத்து 580 ஆக அதிகரித்து உள்ளது.

இதைப்போல அந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,130 பேரின் உயிரை கொரோனா காவு கொண்டிருக்கிறது. இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 87 ஆயிரத்து 882 ஆக அதிகரித்து உள்ளது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் நிகழ்ந்தாலும் நாட்டின் பலி சதவீதம் 1.6 ஆக சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கொரோனா மரணங்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 455 பேர் பலியாகி உள்ளனர். அடுத்ததாக கர்நாடகா 101, உத்தரபிரதேசம் 94, மேற்கு வங்காளம் 61, தமிழ்நாடு 60, ஆந்திரா 57, பஞ்சாப் 56, மத்திய பிரதேசம் 27, டெல்லி 37, அரியானா 29 என பிற மாநிலங்களும் கொரோனா மரணங்களை பெற்றிருக்கின்றன.

மேலும் குஜராத் 17, கேரளா 16, காஷ்மீர், அசாம் மற்றும் ராஜஸ்தான் தலா 14, உத்தரகாண்ட் மற்றும் சத்தீஸ்கார் தலா 13, ஒடிசா 10, தெலுங்கானா மற்றும் கோவா 9, திரிபுரா 6, சண்டிகர், இமாசல பிரதேசம் தலா 4, பீகார், சிக்கிம் தலா 3, மணிப்பூர், ஜார்கண்ட் தலா 2 என பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா இறப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்த மரணங்களிலும் அதிகபட்சமாக மராட்டிய மாநிலம் 32 ஆயிரத்து 671 பேரை பலி கொடுத்திருக்கிறது. அடுத்ததாக தமிழகம் 8,871, கர்நாடகா 8,023, ஆந்திரா 5,359, உத்தரபிரதேசம் 5,047, டெல்லி 4,982, மேற்கு வங்காளம் 4,359, குஜராத் 3,319, பஞ்சாப் 2,813 என கணிசமான பலி எண்ணிக்கையை கொண்டிருக்கின்றன.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் 7 லட்சத்து 31 ஆயிரத்து 534 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இவற்ை-யும் சேர்த்து இதுவரை 6 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 594 பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

Next Story