திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ஆம் நாள் பிரம்மோற்சவம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்பு


திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ஆம் நாள் பிரம்மோற்சவம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்பு
x
தினத்தந்தி 24 Sep 2020 3:33 AM GMT (Updated: 24 Sep 2020 3:42 AM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாள் விழாவில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சாத்தினார்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது ஆகும். ஆண்டு தோறும் பிரம்மோற்சவ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சில ஆயிரம் பேர் மட்டுமே திருமலைக்கு வந்துள்ளனர்.

கடந்த 19 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழாவானது, 27ஆம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளல் நடைபெற்றது.

தங்க கருடாழ்வாரின் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மலையப்பசாமி எழுந்தருளும் நிகழ்வு மிகவும் பிரசித்திபெற்றது ஆகும். இந்த விழாவில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சாத்தினார். மேலும் காசுமாலை உள்ளிட்ட ஆபரணங்கள் திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நிலையில், தீபாராதனை காட்டப்பட்டு அனைவரும் தரிசித்தனர்.

Next Story