பா.ஜனதா கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியது: வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு


பா.ஜனதா கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியது: வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 27 Sep 2020 1:56 AM GMT (Updated: 27 Sep 2020 1:56 AM GMT)

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பா.ஜனதா கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியது.

சண்டிகர், 

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த முக்கிய கட்சிகளில் சிரோமணி அகாலிதளமும் ஒன்று. அதிலும் தேசிய ஜனநாயக கூட்டணி நிறுவனர்களில், அகாலிதளத்தின் மூத்த தலைவரான பிரகாஷ் சிங் பாதலும் ஒருவர் ஆவார். ஆனால் வேளாண் மசோதாக்கக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் தேர்வு கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டது.

ஆனால் இதை நிராகரித்த மத்திய அரசு, இந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனை எதிர்த்து, அகாலிதளம் சார்பில் மத்திய மந்திரி சபையில் அங்கம் வகித்து வந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார். மேலும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் சிரோமணி அகாலிதளத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று சண்டிகரில் நடந்தது. இதில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என முடிவு செய்யப்பட்டது. இதை கட்சி தலைவர் சுக்பிர் சிங் பாதல் பின்னர் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

Next Story