தேவேந்திர பட்னாவிசுடன் சிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத் சந்திப்பு- மராட்டிய அரசியலில் பரபரப்பு


தேவேந்திர பட்னாவிசுடன் சிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத் சந்திப்பு- மராட்டிய அரசியலில் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Sep 2020 8:55 AM GMT (Updated: 27 Sep 2020 10:45 AM GMT)

தேவேந்திர பட்னாவிசை சிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத் நேற்று சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் பாஜகவுடன் நீண்ட காலம் கூட்டணியில் இருந்த சிவசேனா, சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட மோதலால்  பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது.  மராட்டியத்தில் தற்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து சிவசேனா கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே உள்ளார். மராட்டியத்தில் இந்தக் கூட்டணி ஆட்சி கிட்டதட்ட ஓராண்டு காலத்தை நெருங்கியுள்ளது.

இந்த சூழலில், ஆளும் சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்செய் ராவத், மராட்டிய பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிசை சந்தித்துப் பேசினார். அரசியலில் எதிரெதிர் திசையில் இருக்கும் இரு தலைவர்களில் இந்த திடீர் சந்திப்பு மராட்டிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தனது சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்த சஞ்செய் ராவத், எங்களுக்குள் சித்தாந்த ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும் நாங்கள் இருவரும் எதிரிகள் இல்லை. நான் தேவேந்திர பட்னாவிசை சந்தித்தது முதல் மந்திரிக்கும் தெரியும்.” என்றார்.

சஞ்செய் ராவத் தன்னை சந்தித்தது குறித்து பேசிய தேவேந்திர பட்னாவிஸ்,  சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிற்காக என்னை பேட்டி எடுக்க வந்தார்.  இது குறித்து விவாதிக்கவே சந்திப்பு நடைபெற்றது. நான் சில நிபந்தனைகள்  விதித்தேன். எனது பேட்டி எந்த வித எடிட்டிங்கும் இல்லாமல் முழுமையாக இடம் பெறவேண்டும் என்று விரும்புவதாக கூறினேன்.  சஞ்செய் ராவத் உடனான சந்திப்பின் போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை” என்றார்.


Next Story