சீனாவுடனான மோதலுக்கு மத்தியில் எல்லையில் பீரங்கிகளை நிறுத்தியுள்ள இந்திய ராணுவம்


சீனாவுடனான மோதலுக்கு மத்தியில்  எல்லையில்  பீரங்கிகளை நிறுத்தியுள்ள இந்திய ராணுவம்
x
தினத்தந்தி 27 Sep 2020 10:39 AM GMT (Updated: 27 Sep 2020 10:39 AM GMT)

சீனாவுடனான மோதலுக்கு மத்தியில் எல்லையில் இந்திய ராணுவம் பீரங்கிகளை நிறுத்தியுள்ளது.

டெம்சாக்,

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த மே மாதத்தில் இருந்து அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து மோதலுக்கு தயாராகி வருகின்றன.

இதனால் லடாக் எல்லையின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகள் உள்ளிட்ட பகுதிகள் உச்சக்கட்ட பதற்றத்தில் உள்ளன. எனவே அந்த பகுதிகளில் படைகளையும், ஆயுதங்களையும் குவித்து இந்தியா கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட்டு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் அமைதி பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. குறிப்பாக இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் அடிக்கடி சந்தித்து எல்லையில் பதற்றத்தணிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே,  கடந்த 5 மாதங்களாக பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு பாதுகாப்பை பலப்படுத்தவும் லடாக்கின் கிழக்குப்பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், டாங்கிகள், பீரங்கிகளை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது. மேலும், எல்லையை ஒட்டிய பகுதியில் முகாம்கள் மற்றும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணியில் இந்திய வீரர்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர்.


Next Story