கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு


கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 28 Sep 2020 11:30 PM GMT (Updated: 28 Sep 2020 11:22 PM GMT)

கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் டீகோப்ளானின், மற்ற மருந்துகளை விட 20 மடங்கு பலன் தருகிறது என்று டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, சீனாவில் கடந்த டிசம்பரில் தோன்றி இந்த 10 மாத காலத்தில் உலகம் முழுவதும் 3.31 கோடி பேரை தாக்கியுள்ளது. 9.97 லட்சம் பேர் உயிரிழந்தும் இருக்கிறார்கள். ஆனாலும் இன்னும் இந்த தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருந்துகூட கண்டுபிடிக்கப்படவில்லை.

தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகள்தான் உருவாக்கப்பட்டு, அவையும் மருத்துவ பரிசோதனையில் உள்ளன. தொற்று பாதித்தவர்களுக்கு, ஏற்கனவே பிற நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்துகிற மருந்துகளை சோதனை ரீதியில் அவசரத்துக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் இப்படி அனுமதி தரப்பட்டுள்ள 23 மருந்துகளை டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ந்துள்ளது. இந்த ஆய்வில், கிராம் பாசிட்டிவ் பாக்டீரியாவால் ஏற்படும் தீவிர நோய் தொற்றுகளுக்கு சிகிச்சையில் பயன்படுத்தக்கூடிய ‘டீகோப்ளானின்’ மருந்து, கொரோனா வைரஸ் சிகிச்சையில் நல்லபலனைத் தருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எப்.டி.ஏ.) அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இதுபற்றி டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர் அசோக் படேல் கூறும்போது, “கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிற லோபினாவிர், ஹைட்ராக்சிகுளோரோகுயின் போன்ற மருந்துகளை விட ‘டீகோப்ளானின்’ 20 மடங்கு வரை அதிக செயல் திறன் மிக்கதாக கண்டறியப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இந்த ஆய்வு முடிவு, ‘இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் பயாலஜிக்கல் மேக்ரோமிகுலூஸ்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

பேராசிரியர் அசோக் படேல் மேலும் கூறும்போது, “சமீபத்தில் ரோம் நகரில் உள்ள சபியென்சா பல்கலைக்கழகத்தில் டீகோப்ளானின் மருந்தை வைத்து ஆய்வு செய்துள்ளனர். இருப்பினும் இன்னும் அதிகளவிலான ஆய்வு தேவைப்படுகிறது. லேசான, மிதமான மற்றும் தீவிரமான நோயாளிகளுக்கு இந்த மருந்தை அளித்து அது எந்த அளவுக்கு பலன் தருகிறது என்று ஆராய்ந்தால்தான், கொரோனாவுக்கு எதிரான இந்த மருந்தின் பங்களிப்பு குறித்த திட்டவட்டமான முடிவுக்கு வர முடியும்” என குறிப்பிட்டார்.

Next Story