2ஜி மேல்முறையீட்டு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு
2ஜி வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த மனுக்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
புதுடெல்லி,
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், தனியார் தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், இதனால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், அப்போதைய மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான, ராஜா, அந்த கட்சியின் எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த, டெல்லி, சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரமில்லை என கூறி, அனைவரையும் விடுதலை செய்து, 2017 டிசம்பரில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த மனுக்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
முன்னதாக இவ்வழக்கு விசாரணையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்ற சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வாதத்திற்கு எதிர்மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story