பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்புக்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு


பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்புக்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு
x
தினத்தந்தி 30 Sep 2020 8:56 AM GMT (Updated: 30 Sep 2020 8:56 AM GMT)

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸ் விசாரித்த இவ்வழக்கு, பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங் உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 17 பேர் இறந்து விட்டதால், 32 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில், சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் தினசரி விசாரணை நடந்து வந்தது. 350 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இறுதியாக, குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட 32 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடந்தது. கொரோனா காலமாக இருப்பதால், பெரும்பாலானோர் காணொலி காட்சி மூலம் ஆஜரானார்கள். தாங்கள் நிரபராதி என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கில் சேர்க்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.இம்மாத தொடக்கத்தில் வழக்கு விசாரணை முடிவடைந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து,  இந்த  வழக்கில் இன்று தீர்ப்பளித்த லக்னோ சி.பி.ஐ. கோர்ட்,  குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. 

இந்த வழக்கின் தீர்ப்பை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “ பாஜக தலைவர்கள் மீதும், துறவிகள் மீதும்  காங்கிரஸ் அரசு பொய் வழக்குகள் புனைந்தது தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.  வாக்கு வங்கி அரசியலுக்காக பொய் வழக்குகள் போடப்பட்டதற்காக, சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கோர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 


Next Story