நடிகை ரியா சக்ரபோர்த்தியின் நீதிமன்ற காவல் அக்.20 வரை நீட்டிப்பு


நடிகை ரியா சக்ரபோர்த்தியின் நீதிமன்ற காவல் அக்.20 வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 6 Oct 2020 7:58 AM GMT (Updated: 6 Oct 2020 7:58 AM GMT)

நடிகை ரியா சக்ரபோர்த்தியின் நீதிமன்றக் காவல் வரும் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகரின் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே.சிங் பீகார் போலீசில் அளித்த புகாரை தொடர்ந்து, தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய 3 முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றன.

போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தியின் தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

போதைப்பொருள் கும்பலுடன் நடிகை ரியாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நடிகை ரியாவிடம் 3 நாட்களாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே நடிகை ரியா, தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்றும், சுஷாந்த் சிங்கிற்கு அந்த பழக்கம் இருந்தது என்றும் நிருபர்களிடம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கிடையில்,  நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் மும்பையில் செப்டம்பர் 8 ஆம் தேதி  கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.  ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர்  சோவிக் ஆகியோரின் நீதிமன்றக்காவல் இன்றுடன் முடிவுக்கு வந்தது. 

இந்த நிலையில்,  நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் சோவிக் ஆகியோரின் நீதிமன்றக் காவல் வரும் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் தவிர போதைப்பொருள் வழக்கில் கைதான மேலும் 18 பேருடைய நீதிமன்றக்காவலையும் வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. 

Next Story