சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் அஸ்வானி குமார் தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்


சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் அஸ்வானி குமார் தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்
x
தினத்தந்தி 7 Oct 2020 8:45 PM GMT (Updated: 7 Oct 2020 8:45 PM GMT)

சி.பி.ஐ. யின் முன்னாள் இயக்குனர் அஸ்வானி குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது பற்றி அதிர்ச்சி தரும் பல பின்னணி தகவல் கூறப்படுகிறது.

புதுடெல்லி,

மத்திய புலனாய்வு பிரிவான சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குனர் அஸ்வானி குமார். 2008-2010-ல் அவர் இந்த பொறுப்பை வகித்தார். இந்தியாவை உலுக்கிய ஆருஷி கொலை வழக்கில் பல திருப்பங்களை வெளிக் கொண்டு வந்தபோது அவரது பெயர் அகில இந்திய அளவில் அதிகமாக உச்சரிக்கப்பட்டது. பின்னாளில் நாகாலாந்து மாநில கவர்னராகவும் பதவி வகித்தவர். சிம்லாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் அஸ்வானி குமார் நேற்று சிம்லாவில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த திடீர் முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் துணை வேந்தராக இருந்து வந்த ஏ.பி.ஜி. பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்கு போலியாக பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து 19 உறுப்பினர்கள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.

இது தொடர்பான விவகாரங்களால் அவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டிலேயே முடங்கியிருந்த அவர் திடீரென தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருந்தாலும் அவரது தற்கொலைக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவரவில்லை. அஸ்வானி குமார் 1950-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி இமாசலபிரதேசத்தின் நகான் என்ற இடத்தில் பிறந்தார். 1971-ல் பட்டப்படிப்பை முடித்த அவர், 1973-ல் ஐ.பி.எஸ். அதிகாரியாக இமாசலபிரதேசத்தில் பணியில் சேர்ந்தார்.

பணிக்கு சேர்ந்த பின்பும் எம்.பி.ஏ. படிப்பையும், பி.எச்டி. ஆராய்ச்சி படிப்பையும் நிறைவு செய்தார். தனது திறமைகள், பழகும் பண்பு ஆகியவற்றால் உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெற்று உயர்ந்தார். இமாசல பிரதேச மாநிலத்தின் டி.ஜி.பி. ஆகவும் (2006-2008) கவுரவம் பெற்றார். சி.பி.ஐ.யின் இயக்குனராகவும் உயர்ந்தார். தொடர்ந்து பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து வந்த அவர், பணி ஓய்வுக்குப் பின், 2013-ல் நாகாலாந்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

Next Story