2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய விதிமுறைகளை சி.பி.ஐ. பின்பற்றவில்லை சுப்ரீம் கோர்ட்டில் எதிர்மனுதாரர்கள் வாதம்


2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய விதிமுறைகளை சி.பி.ஐ. பின்பற்றவில்லை சுப்ரீம் கோர்ட்டில் எதிர்மனுதாரர்கள் வாதம்
x
தினத்தந்தி 8 Oct 2020 11:15 PM GMT (Updated: 8 Oct 2020 11:05 PM GMT)

2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய உரிய விதிமுறைகளை சி.பி.ஐ. பின்பற்றவில்லை என்று எதிர்மனுதாரர்களின் வக்கீல்கள் வாதிட்டனர்.

புதுடெல்லி,

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு விடுதலை செய்து தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக, சி.பி.ஐ., அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் 4-வது நாளாக நேற்று நடைபெற்றது.

அப்போது எதிர்மனுதாரர் சுரேந்திரபிப்ரா தரப்பு வக்கீல் ஹரிஹரன் வாதிடுகையில், ‘2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை உரிய விதிமுறைகளை பின்பற்றி சி.பி.ஐ. தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த விவகாரத்தில் சிறப்பு அரசு வக்கீல்கள் நியமனம் தொடர்பாக ஆவணத்தை சி.பி.ஐ. தாக்கல் செய்யாத நிலையில், ஐகோர்ட்டிடம் கலந்து ஆலோசித்ததை எப்படி நம்ப முடியும்?. ஐகோர்ட்டின் ஆலோசனைக்கு பின்பே, குற்ற வழக்கில் அரசு வக்கீலை நியமிக்க வேண்டும், மேல்முறையீடு செய்ய வேண்டும், வழக்கை நடத்த வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது’ என வாதிட்டார்.

இதேபோல் எதிர்மனுதாரர்கள் யூனிடெக் நிறுவனம் தரப்பு வக்கீல் டி.பி.சிங், வினோத் கோயங்கா தரப்பு வக்கீல் ஆத்மராம் நாத்கார்ணி ஆகியோர், ‘மூத்த வக்கீல்களின் ஒப்புதல் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனுக்களை நிராகரிக்க வேண்டும்’ என வாதிட்டனர்.

இந்த வாதங்களுக்கு சி.பி.ஐ. சார்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயினுக்கு உத்தரவிட்ட நீதிபதி பிரிஜேஷ் சேத்தி வழக்கு விசாரணையை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு தள்ளிவைத்தார்.

Next Story