7 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம்; இளம்பெண் தற்கொலை: 2 மாதங்களுக்கு பின் தொடங்கிய விசாரணை


7 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம்; இளம்பெண் தற்கொலை:  2 மாதங்களுக்கு பின் தொடங்கிய விசாரணை
x
தினத்தந்தி 9 Oct 2020 5:46 AM GMT (Updated: 9 Oct 2020 5:46 AM GMT)

சத்தீஷ்காரில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் 2 மாதங்களுக்கு பின் விசாரணை தொடங்கியுள்ளது.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் கொண்டகாவன் மாவட்டத்தில் தனோரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது தோழியுடன் பழங்குடியின் இளம்பெண் ஒருவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபொழுது, 7 பேர் அந்த இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி அருகேயிருந்த வன பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.  இதன்பின்னர் வீடு திரும்பிய அந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை அவரது குடும்பத்தினர் புதைத்து விட்டனர்.  போலீசார் இதுவரை எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யவில்லை என அவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.  இதனால் மனமுடைந்த, இளம்பெண்ணின் தந்தை கடந்த 4ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதன்பின்னரே 2 மாதங்களுக்கு பின்னர் போலீசார் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  இந்த விவகாரம் பற்றி தெரிந்திருந்தும் தனோரோ காவல் நிலைய அதிகாரி சோரி நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர் ஒருவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சோரி உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.  உயரதிகாரிக்கு தகவல் தெரிவிக்காமல், உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக அவர் மீதும் விசாரணை நடந்து வருகிறது.

Next Story