வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவு- விரைந்து அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்


வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவு- விரைந்து அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 14 Oct 2020 11:20 AM GMT (Updated: 14 Oct 2020 11:20 AM GMT)

முடிவை அமல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கோருவது நியாயமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது.

புதுடெல்லி,

வங்கிகளில் மக்கள் பெற்ற கடன்களுக்கான மாதத்தவணையை கொரோனாவால் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாகவும், அதை ரத்து செய்யக்கோரியும் கஜேந்திர சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது 

2 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியுள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், கல்வி கடன் பெற்றவர்கள், வீட்டுக்கடன், வாகனக்கடன், தொழில் புரிய 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்ற தனிநபர்கள், 2 கோடி ரூபாய் வரையிலான கன்ஸ்யூமர் கடன் பெற்றவர்கள், 2 கோடி ரூபாய் வரை கிரெடிட் கார்டு நிலுவை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் 6 மாதத்திற்கான கூட்டு வட்டியை (வட்டிக்கு வட்டி வசூலிப்பது) தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,   6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும்  முடிவை விரைவில் அமல்படுத்த வேண்டும் என  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும்,முடிவை அமல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கோருவது நியாயமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது. வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யும் முடிவை வங்கிகள் அமல்படுத்த தொடங்கி விட்டதாக மத்திய அரசு, வங்கிகள் கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது. 

Next Story