ரெயில் பயணங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் ஓராண்டு சிறை!!


ரெயில் பயணங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் ஓராண்டு சிறை!!
x
தினத்தந்தி 15 Oct 2020 7:27 AM GMT (Updated: 15 Oct 2020 7:27 AM GMT)

ரெயில் பயணங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால், ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

புதுடெல்லி

கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மின்சார ரெயில் சேவை கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி முதல் அத்தியாவசிய பணி ஊழியர்களுக்காக இயக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அத்தியாவசிய பணிக்கு செல்லும் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் கூடுதலாக 194 ரெயில் சேவைகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நவராத்திரி பண்டிகையையொட்டி, சென்னை, டெல்லி, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை - மதுரை இடையே, வரும் 19 ஆம் தேதி முதல், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் அதிவிரைவு ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை - கோவை இடையே செவ்வாய் தவிர வாரத்தின் 6 நாள்கள் சதாப்தி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை - டெல்லி இடையே திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தூரந்தோ ரெயில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து மேற்கு வங்க மாநிலம் சந்திரகாசிக்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதேபோல, திருவனந்தபுரத்திலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஷாலிமருக்கும், கன்னியாகுமரியிலிருந்து மேற்கு வங்க மாநிலம் கவுராவுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

பண்டிகைக் காலங்களுக்கான புதிய ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரெயில் பயணங்களுக்கான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, பயணிகள் அனைவருக்கும் மாஸ்க் அணிவதும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயணிகள் பின்பற்றாவிட்டால், 500 ரூபாய் அபராதம் அல்லது 6 மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story