இந்திய விமானப்படை தாக்குதல்களில் அழித்த பாலகோட் பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது


இந்திய விமானப்படை தாக்குதல்களில் அழித்த பாலகோட் பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது
x
தினத்தந்தி 22 Oct 2020 8:01 AM GMT (Updated: 22 Oct 2020 8:01 AM GMT)

இந்திய விமானப்படை தாக்குதலில் அழிந்த பாலகோட் பயங்கரவாத முகாம்களை மீண்டும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தொடங்கி உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி

கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக உலகம் ஒரு போரை நடத்தும் இந்த வேளையில், ​​பயங்கரவாத குழுக்கள் மற்றும் பாகிஸ்தானில் உள்ள அதன் தலைவர்கள் இந்தியாவில் தாக்குதல்களை நடத்த  திட்டம் தீட்டி வருகின்றனர்.

பாகிஸ்தானின் உளவு நிறுவனம் ஐஎஸ்ஐ இந்திய மண்ணில் தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகளுக்கான பயிற்சி முகாம்களை மீண்டும் தொடக்கியுள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

அக்டோபரில், ராஜஸ்தானில் உள்ள இராணுவ தளங்களை குறிவைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

"பதான்கோட் தாக்குதலுக்கு இணையான ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

பாலகோட்டின் ஜெயிஷ்-இ-முகம்மது முகாம்களில் புதிதாக ஆட்கள் சேர்க்கபட்டு பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க உயர் மட்ட கமாண்டர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என உளவுத்துறை  தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலகோட் பயங்கரவாத முகாம்களில் இந்திய விமானப்படை சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி சுமார் 18 மாதங்கள் ஆகின்றன.  அங்கு மீண்டும்  ஐஎஸ்ஐ பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க முகாம்களை தொடங்கி உள்ளது.

பாலகோட் முகாமில் புதிதாக கட்டுப்பாட்டு அறை செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு உதவ, இந்த கட்டுப்பாட்டு அறையை ஜெயிஷ்-இ-முக்கம்மது  மற்றும் பிற பயங்கரவாத குழுக்கள் பயன்படுத்துகின்றன. 

டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் திட்டங்களை கையாள்வதற்கான பணியை ஜெய்ஷ் இ பயங்கரவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, ​​பாகிஸ்தானில் சுமார் 40,000 பயங்கரவாதிகள் உள்ளனர், அவர்களில் 16 பேர் ஐநா சபையால் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜமாத்-உத்-தாவா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள், இந்த இரண்டு அமைப்புகளும் உலகளவில் தடைசெய்யப்பட்டுள்ளன, ஆனால் அவர்கள் இன்னும் பாகிஸ்தானில் தங்கு தடையின்றி செயல்பட்டு வருகிறார்கள்.

Next Story