இந்தியா - சீனா இடையேயான 8-வது கட்ட ராணுவ பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெற வாய்ப்பு


இந்தியா - சீனா இடையேயான 8-வது கட்ட ராணுவ பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெற வாய்ப்பு
x
தினத்தந்தி 26 Oct 2020 1:26 AM GMT (Updated: 26 Oct 2020 1:26 AM GMT)

எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே ராணுவரீதியிலும், அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

புதுடெல்லி,

கிழக்கு லடாக்கில், கடந்த மே மாதம் சீன படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீற துணிந்ததால், இந்திய-சீன படைகள் இடையே மோதல் அபாயம் உருவெடுத்தது. கடந்த ஜூன் 15-ந் தேதி, சண்டை மூண்டது.

அதைத் தொடர்ந்து பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே ராணுவரீதியிலும், அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.கடந்த மாதம் 10-ந் தேதி, மாஸ்கோவில், இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், படைகளை விரைந்து விலக்கிக்கொள்வது உள்பட 5 அம்ச உடன்பாடு ஏற்பட்டது.

கடந்த மாதம் 21-ந் தேதி, இரு நாடுகள் இடையே ராணுவரீதியிலான 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கூடுதலாக படைகளை அனுப்பக்கூடாது, நிலைமையை சிக்கலாக்கும் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை இரு நாடுகளும் வெளியிட்டன.

இருநாடுகளும் இதுவரை 7 கட்டங்களாக எல்லைப் பதற்றத்துக்கு முடிவு கட்ட கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், 8-வது கட்ட பேச்சுவார்த்தை நடப்பு வாரம் நடைபெற உள்ளது. இதற்கான தேதியை இறுதி செய்யும் பணியில் இரு நாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.


Next Story