டெல்லியில் கொரோனா வைரசின் 3வது அலை சாத்தியம்; சுகாதார மந்திரி


டெல்லியில் கொரோனா வைரசின் 3வது அலை சாத்தியம்; சுகாதார மந்திரி
x
தினத்தந்தி 31 Oct 2020 1:44 AM GMT (Updated: 31 Oct 2020 1:44 AM GMT)

டெல்லியில் கொரோனா வைரசின் 3வது அலை ஏற்பட சாத்தியம் உள்ளது என்று மாநில சுகாதார மந்திரி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், சில மாநிலங்களில் மட்டும் தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உச்சம் தொட்டு வருகிறது.

இதன்படி, கடந்த 27ந்தேதி 4,853 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு, ஒரு நாளில் புதிய உச்சம் தொட்டது.  இதன்பின்னர் கடந்த 28ந்தேதி 5,673 பேருக்கு பாதிப்புகள் என்ற புதிய உச்ச அளவை எட்டியது.  தொடர்ந்து 3வது நாளாக டெல்லியில் நேற்று ஒரு நாளில் மட்டும் 5,739 பேருக்கு தொற்று உறுதியானது.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒரு வாரத்திற்கு நிலைமை என்ன என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.  அதுவரை உறுதியாக எதனையும் நாம் கூற முடியாது.  3வது அலை ஏற்படுவதற்கு சாத்தியம் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

கொரோனா நோயாளிகளை விரைவாக கண்டறிதல், பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தியது போன்ற தீவிர நடவடிக்கையால் டெல்லியில் தற்போது கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நல்ல முடிவுகளை விரைவில் காண முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.  தொற்றுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதில் தொடர்ந்து நாங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.

Next Story